search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சென்னை மற்றும் புறநகர் பகுதியில் 8 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை
    X

    சென்னை மற்றும் புறநகர் பகுதியில் 8 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை

    • சென்னை, திருவள்ளூர், கேரளா உள்ளிட்ட இடங்களில் பல்வேறு கட்ட சோதனைகள் நடைபெற்றுள்ளது.
    • போரூர் பகுதி சேர்ந்த ஐயப்பா என்பவரது வீட்டில் நடத்திய சோதனையில் 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

    சென்னை:

    1500 கோடி ரூபாய் போதை பொருள் மற்றும் ஆயுதம் கடத்தப்பட்ட வழக்கில் கொச்சியை சேர்ந்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் சென்னையில் அதிரடி சோதனை நடத்தினர்.

    இதில் தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு நிதி திரட்டுவதற்காக ஹவாலா பண பரிவர்த்தனையில் இலங்கை மற்றும் சென்னையை சேர்ந்த குருவிகள் ஈடுபட்டது விசாரணையில் அம்பலமாகி உள்ளது.

    கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்ட கடலோர எல்லை பகுதியில் கடந்த 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் சிறிய ரக படகு ஒன்றை கடலோர காவல் படையினர் மடக்கி பிடித்தனர். அதில் 300 கிலோ ஹெராயின் மற்றும் ஏகே 47 ரக துப்பாக்கிகள் தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

    தடை செய்யப்பட்ட விடுதலை புலிகள் இயக்கத்திற்காக நிதி திரட்டும் முயற்சியில் போதைப்பொருள் மற்றும் ஆயுதங்கள் கடத்தப்பட்டு இருக்கலாம் என்கிற அடிப்படையில் கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதம் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    சென்னை, திருவள்ளூர், கேரளா உள்ளிட்ட இடங்களில் பல்வேறு கட்ட சோதனைகள் நடைபெற்றுள்ளது. குறிப்பாக கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னை வளசரவாக்கம் பகுதியில் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் முக்கிய பொறுப்பு வகித்த சபேசன் என்பவர் கைது செய்யப்பட்டார். முன்னதாக விழுஞ்சியம் ஆயுதம் மற்றும் போதை பொருள் கடத்தல் வழக்கில் இரண்டு இலங்கை தமிழர்கள் கைது செய்யப்பட்டனர்.

    அதனை தொடர்ந்து அதே ஆண்டு அக்டோபர் மாதம் பல்வேறு இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர், மேலும் 2022-ம் ஆண்டு ஜூலை மாதம் இந்த விவகாரத்தில் தொடர்புடைய நபர்களிடம் விசாரணை நடத்த ஏழு இடங்களில் சோதனை நடைபெற்றது. அதில் விடுதலைப்புலிகள் இயக்கம் தொடர்பான ஆவணங்கள் எலக்ட்ரானிக் சாதனங்கள் சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனை அடுத்து கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அதிரடி சோதனையாக திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள அகதிகள் முகாமில் ஆய்வு மேற்கொண்டு ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் இவர்களிடம் இருந்தும் பல்வேறு செல்போன் மற்றும் சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    இந்த நிலையில் மீண்டும் இன்று சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஏழு இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

    குறிப்பாக குன்றத்தூரை சேர்ந்த பிளாரன்ஸ் கோவூர் பகுதியை சேர்ந்த சுரேஷ் குமார், பம்மல் பகுதியை சேர்ந்த ஏசுதாஸ் ஆகியோரின் இல்லங்களிலும் மண்ணடி பகுதியில் இயங்கி வரும் ஆப்பிள் பேலஸ், ஆரஞ்சு பேலஸ், கிரீன் பேலஸ் ஆகிய தனியார் விடுதிகளிலும், பாரிமுனை ஈவினிங் பஜார் பகுதியில் இயங்கி வரும் ஒரு கடையிலும் என எட்டு இடங்களில் சோதனை நடைபெற்றது.

    குறிப்பாக போதைப்பொருள் மற்றும் ஆயுதம் கடத்தல் மூலம் கிடைக்கும் பணத்தை ஹவாலா பணமாக மாற்றி பல்வேறு நபர்களுக்கு சிறிய தொகையாக வங்கி கணக்குகளில் செலுத்தி வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதன் அடிப்படையில் சென்னையில் எந்தெந்த இடங்களில் இதுபோன்று பணப்பரிமாற்றம் நடைபெறுகிறது என்பது குறித்து வங்கி கணக்குகள் மூலம் ஆய்வு செய்த தேசிய புற்றுநோய் முகமை அதிகாரிகள் அதன் அடிப்படையில் சோதனையில் ஈடுபட்டனர்.

    அதன்படி சென்னை வேளச்சேரியை சேர்ந்த நீசா பாத்திமா என்பவருக்கு சொந்தமான ஈவினிங் பஜார் பகுதியில் உள்ள கடையில் சுமார் 70 லட்சம் ரூபாய் ரொக்க பணம், 300 கிராம் தங்க நகைகள், 1000 சிங்கப்பூர் டாலர் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கடையில் பணியாற்றிய முகமது இலியாசிடம் விசாரணை நடைபெற்றது. தொடர்ந்து அந்த கடையில் சோதனை நடைபெற்று வருகிறது.

    இதனை அடுத்து மண்ணடி பகுதியில் இருக்கக்கூடிய மூன்று தனியார் விடுதிகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் ஆரஞ்ச் பேலஸ் தனியார் விடுதியில் 12 லட்சம் ரூபாய் கணக்கில் காட்டப்படாத ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    போரூர் பகுதி சேர்ந்த ஐயப்பா என்பவரது வீட்டில் நடத்திய சோதனையில் 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

    பொதுவாக இலங்கையில் இருந்து குருவியாக சென்னைக்கு வந்து ஹவாலா பணத்தை பரிமாற்றம் செய்துவிட்டு செல்வதற்கு ஏதுவாக மண்ணடி பகுதியில் இயங்கி வரும் சில தனியார் லாட்ஜூகள் உதவுவதாக அதிகாரிகள் சோதனையில் தெரிய வந்துள்ளது.

    மேலும் சென்னையில் அவ்வப்போது குருவிகள் வங்கி கணக்குகளில் பணம் செலுத்தும்போது சில நபர்கள் பின்தொடர்ந்து அவர்களை தாக்கி பணத்தை கொள்ளையடிக்கும் சம்பவம் அவ்வப்போது நடைபெற்றது. இவர்கள் எங்கு யார் வங்கிக்கு இந்த பணத்தை செலுத்துகிறார்கள் என்பது குறித்த விவரங்களும் முழுமையாக கிடைக்கப்பெறாத நிலையில், தற்போது அவர்கள் சிறிய அளவிலான செலுத்தப்படும் தொகைகள் ஹவாலா பண பரிமாற்றம் என தெரியவந்துள்ளது.

    குறிப்பாக ஒரு வங்கி கணக்கிற்கு மொத்தமாக பணம் செலுத்தும்போது அது வருமான வரித்துறை, வங்கி அதிகாரிகள் கவனத்திற்கு சென்று சந்தேகத்தை ஏற்படுத்தும். எனவே அதை தவிர்க்க பல்வேறு தனிநபர்களிடம் சிறிய தொகையாக இந்த பணத்தை கொடுத்து அவர்கள் குறிப்பிட்ட ஒரு வங்கி கணக்கிற்கு இந்த பணத்தை செலுத்தி வந்ததும் தெரிய வந்துள்ளது.

    மேலும் விழுஞ்சியம் கடற்பகுதியில் பிடிபட்ட போதை மற்றும் ஆயுத பொருட்கள் கடத்தல் வழக்கில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பல்வேறு கட்ட சோதனைகள் என்.ஐ.ஏ. அதிகாரிகள் மேற்கொண்டு 20-க்கும் மேற்பட்ட நபர்களை இதுவரை கைது செய்துள்ளனர். அதன் அடுத்த கட்டமாக இன்று சென்னை மற்றும் புறநகர் பகுதியில் 8 இடங்களில் நடைபெற்ற சோதனையில் சுமார் ஒரு கோடி ரூபாய் வரையில் ரொக்க பணமும் 300 கிராம் தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×