search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வண்டலூர்-ஊரப்பாக்கம் இடையே கிளாம்பாக்கம் பஸ் நிலையம் அருகே புதிய ரெயில் நிலையம்
    X

    கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, தா.மோ.அன்பரசன் ஆகியோர் ஆய்வு செய்த காட்சி.

    வண்டலூர்-ஊரப்பாக்கம் இடையே கிளாம்பாக்கம் பஸ் நிலையம் அருகே புதிய ரெயில் நிலையம்

    • வண்டலூர் மற்றும் ஊரப்பாக்கம் ரெயில் நிலையங்கள், கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து வெகு தொலைவில் உள்ளன.
    • புதிய ரெயில் நிலையம் மற்றும் ஆகாய நடைபாதை அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

    வண்டலூர்:

    சென்னை வண்டலூர் அருகேயுள்ள கிளாம்பாக்கத்தில் 88 ஏக்கர் பரப்பளவில் ரூ.400 கோடி செலவில் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டுள்ளது.

    இங்கு ஒரே நேரத்தில் 2,285 பஸ்களை நிறுத்த முடியும். இந்த பஸ் நிலைய கட்டுமான பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. இந்த மாத இறுதியில் புதிய பஸ் நிலையம் திறக்கப்பட வாய்ப்பு உள்ளது.

    கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள் இயக்கப்படும். மேலும் சென்னையின் அனைத்து பகுதிகளையும் இணைக்கும் வகையில் இங்கிருந்து மாநகர பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    வண்டலூர் மற்றும் ஊரப்பாக்கம் ரெயில் நிலையங்கள், கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து வெகு தொலைவில் உள்ளன.

    எனவே மின்சார ரெயிலில் வரும் பயணிகள் கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையத்துக்கு செல்வதில் சிரமம் ஏற்படும்.

    எனவே பயணிகளின் சிரமத்தை போக்க கிளாம்பாக்கம் பஸ் நிலையம் அருகே புதிய ரெயில் நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய ரெயில் நிலையம் வண்டலூர்-ஊரப்பாக்கம் இடையே அமைகிறது.

    மேலும் புதிதாக அமைய உள்ள ரெயில் நிலையத்துக்கும், கிளாம்பாக்கம் பஸ் நிலையத்துக்கும் இடையே தண்டவாளம் மற்றும் ஜி.எஸ்.டி. சாலை உள்ளது. எனவே புதிய ரெயில் நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் பஸ் நிலையத்துக்கு பயணிகள் எளிதாக செல்ல ஆகாய நடைபாதை அமைக்கப்படுகிறது.

    இந்த ஆகாய நடைபாதை மூலம் பயணிகள் ரெயில் நிலையத்தில் இருந்து தண்ட வாளம், ஜி.எஸ்.டி. சாலை ஆகியவற்றை எளிதாக கடந்து பஸ் நிலையத்தை அடையலாம்.

    புதிய ரெயில் நிலையம் மற்றும் ஆகாய நடைபாதை அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இந்த இடத்தை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தில் உள்ள அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ரெயில் நிலையம், ஆகாய நடைபாதை அமைப்பதற்காக 5.3 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகளை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சகம் தொடங்கி உள்ளது. மேலும் ரெயில் நிலையம் அமைப்பது தொடர்பாக ரெயில்வே அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுடன் சென்னை பெருநகர வளர்ச்சி குழும அதிகாரிகள் பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டு உள்ளனர்.

    புதிய பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் வெளியேறுவதற்கு இடையூறு இல்லாத வகையிலும், அதே நேரத்தில் பயணிகளுக்கு வசதியாகவும் ஆகாய நடைபாதை அமைக்கப்பட உள்ளது.

    இதன் மூலம் மின்சார ரெயில் பயணிகள் எந்தவித சிரமமும் இன்றி கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையத்தை அடைய முடியும்.

    இந்த நிலையில் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, தா.மோ.அன்பரசன் ஆகியோர் இன்று ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் அமைச்சர் பி.கே.சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-

    கிளாம்பாக்கம் பஸ் நிலையம் பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு தமிழக முதலமைச்சரால் திறக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×