என் மலர்
உள்ளூர் செய்திகள்

வனத்துறையால் மீட்கப்பட்ட ஆண் புள்ளிமான் உடல்.
பொம்மிடி அருகே புள்ளிமான்களை வேட்டையாடும் மர்ம நபர்கள் -துப்பாக்கியுடன் சுற்றி திரிபவர்கள் குறித்து மக்கள் புகார்
- மர்மமான முறையில் 5 வயது மதிக்கத்தக்க புள்ளிமான் ஒன்று இறந்து கிடந்தது.
- மானின் இறப்பு குறித்து காரணம் அறிந்த பிறகு வனத்துறை தீவிர விசாரணை மேற்கொள்ளும் என்று தெரிவித்துள்ளனர்.
பாப்பிரெட்டிப்பட்டி,
பொம்மிடி அருகே தருமபுரி, சேலம் மாவட்ட எல்லையில் சேர்வராயன்மலை உள்ளது. இந்த வனப்பகுதியில் அணை கட்டு என்ற இடத்தில் காடுகளை ஒட்டிய தனியார் நிலம் சுமார் 100 ஏக்கர் உள்ளது. இந்த நிலப்பகுதியை ஓட்டிய பகுதியில் மர்மமான முறையில் 5 வயது மதிக்கத்தக்க புள்ளிமான் ஒன்று இறந்து கிடந்தது.
அப்பகுதி வழியாக வந்த பொதுமக்கள் இது குறித்து வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.உடனடியாக பாப்பிரெட்டிப்பட்டி வன சரகர் உத்தரவின் பேரில் சேர்வராயன்மலை வன அதிகாரி செல்வராஜ் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று இறந்த மான் உடலை பொம்மிடி வன அலுவலகத்திற்கு எடுத்து வந்தனர். இதன் எடை 50 கிலோ இருக்கும். இறந்து கிடந்த அந்த ஆண் புள்ளி மானின் உடலில் நாய்க்கடிகள் இல்லை.
இந்த வனப் பகுதியை ஒட்டி சிலர் துப்பாக்கியுடன் அடிக்கடி சுற்றி வருவதால் இந்த மானை மர்ம நபர்கள் சுட்டு கொன்றிருப்பார்களா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த பகுதியில் வேட்டைகாரர்கள் அடிக்கடி நாட்டு துப்பாக்கிகளுடன் சுற்றி திரிவதாகவும் அவர்கள் இறைச்சிக்காக மானை சுட்டு கொண்டிருக்கலாம். மக்களின் நடமாட்டம் தெரிந்து அப்படியே விட்டு விட்டு சென்றிருக்கலாம் என பொதுமக்கள் சந்தேகம் எழுப்புகின்றனர். இறந்து போன புள்ளி மான் உடல் தற்போது பொம்மிடியில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
கால்நடை மருத்துவர் மூலமாக உடற்கூறு ஆய்வு செய்ய இருப்பதாகவும்,அதன் பிறகு மானின் இறப்பு குறித்து காரணம் அறிந்த பிறகு வனத்துறை தீவிர விசாரணை மேற்கொள்ளும் என்று தெரிவித்துள்ளனர்.






