என் மலர்
உள்ளூர் செய்திகள்

கெலமங்கலம் அருகே தலை துண்டித்து கொடூரமாக கொல்லப்பட்ட பெண் யார்?
- தலையை துண்டித்து கொலை செய்யப்பட்ட பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை.
- கெலமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண் யாரும் காணாமல் போய் உள்ளார்களா? என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ராயக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே பேவநத்தம் நஞ்சுண்டேஸ்வரர் கோவில் வனப்பகுதியில் சிலர் கால்நடைகளை மேய்ப்பது வழக்கம். அதன்படி நேற்று காலை அவர்கள் கால்நடைகளை மேய்க்க சென்றனர்.
அப்போது அந்த பகுதியில் துர்நாற்றம் வீசியது. இதையடுத்து அவர்கள் அந்த பகுதியில் சென்று பார்த்தபோது தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ஒரு பெண்ணின் உடல் அழுகிய நிலையில் கிடந்தது.
இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக இதுகுறித்து கெலமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று பெண்ணின் உடலை மீட்டனர்.
மேலும் சிறிது தூரத்தில் வீசப்பட்டிருந்த அந்த பெண்ணின் தலையும் கண்டெடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பெண்ணின் உடல் மற்றும் தலையை பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
தலையை துண்டித்து கொலை செய்யப்பட்ட பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை.
அந்த இடத்தில் கொலை நடந்ததா? அல்லது வேறு எங்கும் கொலை செய்து விட்டு இங்கு வந்து உடல், தலையை போட்டு சென்றார்களா? என போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
கெலமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண் யாரும் காணாமல் போய் உள்ளார்களா? என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.






