search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓசூர் அருகே ஒரே இடத்தில் 89 நடுகற்கள் கண்டுபிடிப்பு
    X

    ஓசூர் அருகே ஒரே இடத்தில் 89 நடுகற்கள் கண்டுபிடிப்பு

    • நடுகற்கள் தொகுப்பு என்பது இம்மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் இருக்கின்றன.
    • 15 -க்கும் அதிகமான அதியமான் நடுகல் தொகுப்பு என இருபத்தைந்துக்கும் மேற்பட்ட இடங்களில் 10 தொடங்கி 89 நடுகற்கள் வரை இருக்கின்றன .

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கெலமங்கலம் பக்கமுள்ள கூலி சந்திரம் என்ற கிராமத்தில், தமிழக வரலாற்றிலேயே முதன்முறையாக அதிக எண்ணிக்கையிலான 89 நடுகற்கள் இருப்பதை அறம் வரலாற்று ஆய்வு மைய குழுவை சார்ந்த அறம் கிருஷ்ணன், மஞ்சுநாத், முனிகிருஷ்ணப்பா, ஆகியோர் கண்டறிந்துள்ளனர்.

    உலக பாரம்பரிய நாளில் மேற்கொண்ட வரலாற்று பயணத்தில் அறம் வரலாற்று ஆய்வு மைய குழுவினர் இவ்விடத்தை கண்டறிந்தனர்.

    தமிழக நடுகற்கள் வரலாற்றில் அதிக நடுகற்கள் இருப்பது மட்டுமில்லாமல் அதிக நடுகற்கள் தொகுப்பு இருப்பதும் கிருஷ்ணகிரி மாவட்டம்தான்.இம்மாவட்டத்தில் 8 -ஆம் நாற்றாண்டு தொடங்கி 18 -ஆம் நூற்றாண்டு வரையிலான நடுகற்கள் தொடர்ச்சியாக அடையாளப் படுத்தப்பட்டு வருகின்றன.

    கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கத்திலிருந்து பாரந்தூர் செல்லும் சாலையில், எச்.செட்டிப்பள்ளி வருகிறது இங்கிருந்து வலதுபக்கம் திரும்பி 5 கி.மீ. பயணம் செய்தால் கூலிசந்திரம் என்ற சிற்றூர் வருகிறது.பல ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து ஊர் பண்டிகைகள் செய்யும் பொது இடத்தில் இந்த 89 நடுகற்களும் சிதறிக்கிடக்கின்றன.இங்கு சிவன் கோயில் ஒன்றும் கட்டபட்டு வருகிறது..

    நடுகற்கள் தொகுப்பு என்பது இம்மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் இருக்கின்றன.

    ஓசூர் தேர்பேட்டையில் -20, நாகொண்டபள்ளியில் 45 ,பேரிகைக்கு அருகில் சிங்கிரிப்பள்ளியில் -74, தேன்கனிக்கோட்டைக்கு அருகில் உள்ள பிக்கனப்பள்ளியில் -48 ,பாகலூருக்கு அருகில் குடி செட்லுவில் -25, ஓசூர் அருகே கொத்தூரில் -28, ஒன்னல்வாடியில் -24, ஓசூரிலிருந்து தளி போகும் சாலையில் உள்ள உளிவீரனபள்ளியில்-32 ,காவேரிப்பட்டிணம் அருகில் பெண்ணேஸ்வர மடத்தில்-25 க்கும் மேல் நடுகற்கள், சின்னகொத்தூரில் 25- க்கும் மேல், தொகரப்பள்ளிக்கு அருகில் 15 -க்கும் அதிகமான அதியமான் நடுகல் தொகுப்பு என இருபத்தைந்துக்கும் மேற்பட்ட இடங்களில் 10 தொடங்கி 89 நடுகற்கள் வரை இருக்கின்றன .

    கூலிசந்திரத்தில் மொத்தமாக 89 நடுகற்கள் இருக்கின்றன இங்கு இருக்கும் அனைத்தும் குரும்பர் இனமக்கள் வழிபடும் 14 ஆம் நூற்றாண்டு தொடங்கி 18 ஆம் நூற்றாண்டு வரையிலான நடுகற்கள் ஒரே இடத்தில் எந்த வகையான பராமரிப்பும் இன்றி சிதறிகிடக்கின்றன.இங்கு கட்டப்பட்டு வரும் சிவன் கோயிலின் பிராதன வளாகம் சுற்றியும் வரிசையாக வைத்து பராமரிக்கும் நோக்கில் வேலைகள் நடைப்பெற்று வருகின்றன. வரலாற்று பொக்கிஷமான இவற்றை பாதுகாக்கும் பொருட்டு அறம் வரலாற்று ஆய்வு மையம் சார்பில் ரூ. 25,000 ஊர் மக்களிடம் வழங்கப்படுள்ளதாக, அறம் கிருஷ்ணன் தெரிவித்தார்

    Next Story
    ×