search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேலைக்கு சென்ற எலக்ட்ரீசியன் புதுப்பாளையம் தரைப்பாலம் அருகே பிணமாக மீட்பு
    X

    வேலைக்கு சென்ற எலக்ட்ரீசியன் புதுப்பாளையம் தரைப்பாலம் அருகே பிணமாக மீட்பு

    • கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.
    • கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை வீட்டில் இருந்த தனது தாய் தேவகியிடம் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு முருகன் வெளியே சென்றார்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள ராள்ளபாடி கிராமத்தில் வசித்து வந்தவர் முருகன் (வயது 34). எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்தார்.

    இவருக்கும் வடமதுரை, பேட்டைமேடு காலனியைச் சேர்ந்த அம்மு என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இத்தம்பதியினருக்கு கீர்த்தனா (வயது 8) என்ற மகளும், ஓவியன்(வயது 6) என்ற மகனும் உள்ளனர். கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

    இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை வீட்டில் இருந்த தனது தாய் தேவகியிடம் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு முருகன் வெளியே சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

    காணாமல் போன தனது மகனை கண்டுபிடித்து தருமாறு தேவகி பெரியபாளையம் காவல் நிலையத்தில் திங்கட்கிழமை மதியம் புகார் செய்திருந்தார்.

    இந்நிலையில் நேற்று மாலை ஆரணி ஆற்றில் புதுப்பாளையம்-அஞ்சாத்தம்மன் கோவில் இடையே உள்ள தரைப்பாலத்தின் அருகே தண்ணீரில் பிணம் ஒன்று மிதப்பதாக பெரியபாளையம் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது. எனவே, போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பிணத்தை கைப்பற்றி திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விசாரணையில் காணாமல் போன முருகன் தண்ணீரில் மூழ்கி இறந்ததை போலீசார் உறுதி செய்தனர். வேலைக்கு சென்றவர் எப்படி ஆரணி ஆற்று நீரில் மூழ்கி பலியானார்? என போலீசார் வழக்கு பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.

    Next Story
    ×