search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருமண மண்டபங்களில் மதுபானங்களுக்கு அனுமதி இல்லை- அமைச்சர் செந்தில் பாலாஜி திட்டவட்டம்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    திருமண மண்டபங்களில் மதுபானங்களுக்கு அனுமதி இல்லை- அமைச்சர் செந்தில் பாலாஜி திட்டவட்டம்

    • ஐ.பி.எல். போன்ற விளையாட்டு போட்டிகளில் மதுபானங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
    • ஏற்கனவே மற்ற மாநிலங்களில் விளையாட்டுப் போட்டிகளில் மதுபானங்களுக்கு அனுமதி உள்ளது.

    கோவை:

    கோவை விமான நிலையத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    சர்வதேச தரத்தில் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் நடைபெறுகிறபோது இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களிலும் விளையாட்டு மைதானங்களில் மது அருந்த அனுமதி உள்ளது.

    சர்வதேச அளவிலான விளையாட்டு போட்டிகள் தமிழகத்தில் நடைபெற வேண்டும் என்றால் மற்ற மாநிலங்களை போல் தமிழ்நாட்டிலும் நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்பதால் அதற்கான அனுமதிகள் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையில் அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் சர்வதேச நிகழ்வு, போட்டிகள் நடைபெறும் இடங்களில் மது அருந்த அனுமதி கேட்டதால் தரப்பட்டுள்ளது. ஐ.பி.எல் போட்டி நடக்கும் சேப்பாக்கம் மைதானத்திலும் மது அருந்துவதற்கான அனுமதியை வாங்கி வைத்துள்ளனர்.

    ஆனால் திருமண மண்டபங்கள் மற்றும் திருமணம் உள்ளிட்ட இதர நிகழ்ச்சிகளில் மது பரிமாற ஒருபோதும் அனுமதி அளிக்கப்பட மாட்டாது. அரசும் இதற்கு அனுமதி கொடுக்காது என்பதை நான் உறுதியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

    தமிழ்நாட்டில் உச்சபட்ச மின் தேவை என்பது வரலாறு காணாத அளவிற்கு 19 ஆயிரம் மெகாவாட்டை கடந்துள்ளது.

    இருப்பினும் தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக டிசம்பர், ஜனவரி மாதங்களிலேயே அதற்கான டெண்டர் கோரப்பட்டு இறுதி செய்யப்பட்டு குறைந்த விலைப்புள்ளியில், அவசர தேவைக்கு ரூபாய் 8க்கு மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது.

    இந்த டெண்டர் மூலமாக தமிழ்நாடு அரசு இந்த 3 மாதத்தில் மட்டும் 1,313 கோடி ரூபாய் சேமித்துள்ளது. அதற்கு காரணம் முதலமைச்சர் எடுத்த முன் எச்சரிக்கை நடவடிக்கை தான்.

    இன்னும் கூடுதலாக மின் தேவை ஏற்பட்டாலும் அதை சமாளிப்பதற்கு மின்வாரியம் தயாராக உள்ளது. எனவே தமிழ்நாட்டை பொறுத்தவரை கோடை காலத்தில் எவ்வளவு மின் தேவை ஏற்படுகிறதோ அதை முழுமையாக சமாளிக்க கூடிய வகையில் தமிழ்நாடு மின்சார வாரியம் தயாராக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×