search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாற்றுச்சான்றிதழ் தர மறுக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை- அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி
    X

    அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி

    மாற்றுச்சான்றிதழ் தர மறுக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை- அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி

    • மாணவர்கள் பள்ளிக்கு செல்போன் கொண்டு வந்தால் பறிமுதல் செய்யப்படும்
    • இந்த ஆண்டில் 9,494 புதிய ஆசிரியர்களை பணியில் அமர்த்த உள்ளோம்.

    திருச்சி:

    திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்த மக்களுக்கு பட்டா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு பயனாளிகளுக்கு பட்டா வழங்கினார்.

    இதில் 322 பேருக்கு பட்டா, 20 பேருக்கு குடும்ப அட்டை, 6 மாற்று திறனாளிகளுக்கு இருசக்கர வாகனம், 64 பேருக்கு கல்மந்தை காலணியில் குடியிருப்பு ஒதுக்கீடு உள்ளிட்ட நல திட்டங்கள் ரூ.60 லட்சத்து 22 ஆயிரத்து 510 மதிப்பில் வழங்கப்பட்டது.

    பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஏற்கனவே அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டும், சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவித்த படியும் எந்த காலத்திலும் செல்போனுக்கு அனுமதி கிடையாது. அதையும் மீறி வகுப்பறைக்கு மாணவர்கள் யாராவது செல்போன் கொண்டு வந்தால் பறிமுதல் செய்யப்படும். அது திருப்பி தரப்படமாட்டாது என்பதை அழுத்தம் திருத்தமாக தெரிவித்துக்கொள்கிறோம்.

    கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்ற ஆன்லைன் வகுப்புகளால் மாணவர்கள் பெரும் உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். அவர்களின் கவன சிதறலை போக்கும் வகையில் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்படுகிறது.

    இந்த நிலையில் முதல் ஐந்து நாட்கள் புத்தாக்க பயிற்சி அளிக்கப்படும். அதன் பின்பு தான் வகுப்புகள் தொடங்கும். 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி தொடங்கிய உடன் தன்னார்வ அமைப்புகள் மற்றும் காவல் துறையை சேர்ந்தவர்களை கொண்டு புத்தாக்க பயிற்சி வழங்கப்படும்.

    இதில் காவல் துறை அதிகாரிகள் கலந்துகொண்டு போக்சோ உள்ளிட்ட சட்டங்கள் குறித்தும், மாணவர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்தும் விளக்கம் அளிக்கப்படும்.

    நீட் தேர்வுக்கு எதிரான சட்ட போராட்டம் தொடர்ந்து நடைபெறுகிறது. நாம் கொடுத்த அழுத்தத்தினால் தான் ஆளுநர் நீட் மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பினார். எந்த சட்டப்போராட்டமாக இருந்தாலும் முதலமைச்சர் அதில் வெற்றி பெறுவார் என்கிற நம்பிக்கை இருக்கிறது. ஜி.எஸ்.டி. நிலுவை தொகையை வழங்கும் படி நேரடியாக பிரதமரிடம் முதலமைச்சர் கோரிக்கை வைத்தார். அதன் காரணமாக ஜி.எஸ்.டி. நிலுவை தொகை மாநிலத்திற்கு வழங்கப்பட்டது.

    முதலமைச்சர் கொடுக்கும் குரல் நியாயமான குரல் என ஒட்டுமொத்த இந்தியாவே ஒத்துக்கொள்கிறது. அது போலத்தான் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்கிற குரலும் நியாயமான குரல். அதில் வெற்றி பெறுவோம் என்கிற நம்பிக்கை இருக்கிறது.

    தனியார் பள்ளிகள் அங்கு படிக்கும் மாணவர்களை சீறுடை, புத்தகம் உள்ளிட்டவற்றை பள்ளிகளிலேயே வாங்க வேண்டும் என கட்டாயப்படுத்த கூடாது. அதேபோல் அரசு பள்ளிகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு அவர்களின் மாற்றுச்சான்றிதழை உடனடியாக தாமதமின்றி வழங்க வேண்டும். அவ்வாறு வழங்காத பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    12 வயதுக்கு மேற்பட்ட 90 சதவீதத்திற்கும் அதிகமான மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு விட்டது. அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை என்பது தொடர்ந்து அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது. அரசு பள்ளியில் சேரும் மாணவர்களை தக்க வைக்கும் வகையில் அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும். இந்த ஆண்டில் 9,494 புதிய ஆசிரியர்களை பணியில் அமர்த்த உள்ளோம்.

    பள்ளிகள் ஆரம்பிக்கப்பட்டாலும் இல்லம்தேடி கல்வியின் தேவை இருக்கிறது. இல்லம் தேடி கல்வி திட்டத்தை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டித்துள்ளோம். இரண்டாண்டுகளுக்கு பின் இந்தாண்டு தான் வழக்கம் போல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து வழக்கம் போல் பள்ளிகள் இயங்கும் போது தான் இல்லம் தேடி கல்வி திட்டத்தை படிப்படியாக நாம் நிறுத்த முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×