என் மலர்
உள்ளூர் செய்திகள்

முதலாம் ஆண்டு வகுப்புகளை தொடங்கி வைத்து மாணவர்களுடன் அமர்ந்து அமைச்சர் இ.பெரியசாமி பாடங்களை கவனித்தார்.
தமிழகத்திலேயே சிறந்த கல்லூரியாக ஆத்தூர் கல்லூரி செயல்படும் அமைச்சர் இ.பெரியசாமி பேச்சு
- தமிழகத்திலேயே சிறந்த கல்லூரியாக ஆத்தூர் கல்லூரி செயல்படும் என அமைச்சர் பேசினார்
- மாணவர்களின் குறைகளை கேட்டறிவதோடு ஆசிரியர், பெற்றோர்களிடமும் கலந்து பேசி கூட்டுறவு கல்லூரியின் தரத்தை உயர்த்த பாடுபடுவேன் என்றார்.
செம்பட்டி:
செம்பட்டி அருகே செயல்படும் ஆத்தூர் கூட்டுறவு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு பாட வகுப்புகள் தொடக்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திண்டுக்கல் கலெக்டர் விசாகன் தலைமை தாங்கினார். மண்டல இணைப்பதிவாளர் காந்திநாதன் வரவேற்று பேசினார்.
அமைச்சர் இ.பெரியசாமி குத்துவிளக்கேற்றி கல்லூரி மாணவர்களுக்கு பாடப்புத்தகங்களை வழங்கி பேசுகையில், ஆத்தூர் தொகுதியில் கூட்டுறவுத்துறையில் செயல்படும் இந்த கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழகத்தின் சிறந்த கல்லூரியாக செயல்படும். காரணம் இந்தியாவில் உள்ள முதல்வர்களில், முதல்வருக்கெல்லாம் முதல்வர் முக.ஸ்டாலின் வரம் கொடுக்கும் தெய்வம் போல், கேட்ட உடன் ஆத்தூர் தொகுதிக்கு இரண்டு கல்லூரிகளை வழங்கினார்.
இப்பகுதியில் உள்ள ஏழை எளிய மாணவர்கள் ரூ.1500 செலவில் தங்களுடைய உயர் கல்வியை கற்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இக்கல்லூரி விரிவடைந்து சுமார் ரூ.60 கோடி மதிப்பில் பல்வேறு பாடப்பிரிவுகளை கொண்ட சிறந்த கல்லூரியாக உருவாக்கப்பட உள்ளது. அதற்கான முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
இங்கு படிக்கும் மாணவர்கள் தனியார் கல்லூரியில் படித்தால் தான் சிறந்த கல்வியை கற்க முடியும் என்ற எண்ணத்தை கைவிட வேண்டும். விரைவில் இந்த கல்லூரியில் படிக்கும் மாணவியருக்கும் உதவித்தொகை கிடைக்கும் என்றார். மாததத்தின் 2 அல்லது 3 முறை நான் இந்த கல்லூரிக்கு வந்து மாணவர்களான உங்களிடம் குறைகளை கேட்டறிவதோடு ஆசிரியர், பெற்றோர்களிடமும் கலந்து பேசி கூட்டுறவு கல்லூரியின் தரத்தை உயர்த்த பாடுபடுவேன் என்றார்.
நிகழ்ச்சியில், சரக துணைப்பதிவாளர் முத்துக்குமார், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநர் செல்வக்குமார், கூட்டுறவு வளர்ச்சி அலுவலர்கள் சக்கரவர்த்தி மணிமாறன், கணேசன், ஆத்தூர் ஒன்றிய குழு தலைவர் மகேஸ்வரி முருகேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிறைவாக கல்லூரி முதல்வர் வெங்கடாசலம் நன்றி கூறினார்.
கல்லூரியில் மாணவர்களுக்கு முதலாம் ஆண்டு பாட வகுப்பு புத்தகங்களை கொடுத்து வாழ்த்தி விட்டு, அவர்கள் வகுப்பறைக்கு சென்று அமைச்சர் இ.பெரியசாமி மற்றும் மாவட்ட கலெக்டர் விசாகன் ஆகியோர், மாணவ மாணவிகளோடு அமர்ந்து அவர்களுக்கு பாடம் நடத்துவதை பார்வையிட்டார்.






