search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களுக்கு வரப்பிரசாதமாகும் மெட்ரோ ரெயில்
    X

    கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களுக்கு வரப்பிரசாதமாகும் மெட்ரோ ரெயில்

    • மெட்ரோ ரெயில் திட்டம் கொண்டு வரும் முயற்சி ஒரு வரப் பிரசாதமாக பார்க்கப்படுகிறது.
    • பலகட்ட தடங்கலுக்கு மத்தியில் முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

    ஓசூர்,

    தமிழ்நாட்டின் மேற்கு மண்டலத்தில் அமைந்துள்ள முக்கியமான தொழில் நகரமான ஓசூரில் ஏராளமான தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகிறது. பல கோடி ரூபாய் மதிப்பில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து தொடர்ந்து முதலீடுகள் குவிந்து வருகிறது.

    இதனால் ஓசூர் வேலை வாய்ப்பை வாரி வழங்கும் முக்கிய மையமாக திகழ்ந்து வருகிறது. மேலும் பெங்களூருக்கு அருகே இருப்பதால் அங்கு வரும் திட்டங்களின் நீட்சி ஓசூருக்கும் கிடைக்க வாய்ப்புள்ளது.

    இந்நிலையில் பெங்களூரு - ஓசூர் நகரங்களை இணைக்கும் விதமாக மெட்ரோ ரெயில் திட்டம் கொண்டு வரும் முயற்சி ஒரு வரப் பிரசாதமாக பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில் மத்திய அரசு, கர்நாடகா அரசு, தமிழ்நாடு அரசு, மெட்ரோ, பெங்களூர் மெட்ரோ ரெயில் நிர்வாகம், சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் என பலரின் ஒப்புதலை பெற்று பலகட்ட தடங்கலுக்கு மத்தியில் முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

    இந்நிலையில் ஓசூர் மெட்ரோ ரெயில் திட்டப் பணிகள் தொடர்பாக ஆய்வுகளை மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது. இது ஓசூர் சுற்றுவட்டார பகுதிகளுக்கு மிகவும் மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

    முன்னதாக மெட்ரோ ரெயில் திட்டத்தின் கொள்கைகள் விதிகளை காரணம் காட்டி இரு மாநிலங்களுக்கும் இடையேயான மெட்ரோ ரெயில் சேவையை செயல்படுத்த முடியாது என தமிழ்நாடு அரசிடம் மத்திய நகர்ப்புற வளர்ச்சி துறை அலுவலர்கள் கூறியுள்ளனர். கிருஷ்ணகிரி எம்.பி. செல்லகுமார் இதில் இருக்கும் சாதகமான அம்சங்களை உரிய சான்றுகளுடன் எடுத்துரைத்துள்ளார்.

    இதன் விளைவாக கொள்கை அடிப்படையில் ஆய்வு பணி மேற்கொள்ள தற்போது அனுமதி கிடைத்திருக்கிறது. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், அலுவலக ஊழியர்கள், பெண்கள், மருத்துவ வசதிக்காக செல்பவர்கள் என பல்வேறு தரப்பினருக்கும் இது உதவிகரமாக இருக்கிறது.

    அதேபோல் ஓசூரில் இருந்து பெங்களூர் செல்பவர்களுக்கும் பயனளிக்கும் விரைவான சொகுசு பயண அனுபவத்தை பெற முடிகிறது. அதிலும் குறிப்பாக தருமபுரி, ஓசூர், கிருஷ்ணகிரி பகுதியில் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு அடித்தளமாக இந்த மெட்ரோ ரெயில் சேவை விளங்குகிறது.

    ஏற்கனவே பெங்களூருவில் நம்ம மெட்ரோ எனும் பெயரில் மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது பொம்மசந்திரா வரை செயல்பட்டு வருகின்ற நிலையில் தற்போது அங்கிருந்து அத்திப்பள்ளி வழியாக ஓசூர் வரை நீட்டிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    ஒருவேளை மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு அதிக செலவு ஏற்படும் என கருதினால் மெட்ரோ லைட் திட்டத்தை முன்னெ டுக்கலாம் என கிருஷ்ணகிரி எம்.பி. செல்லகுமார் வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×