என் மலர்
உள்ளூர் செய்திகள்

கொலை வழக்கில் சிக்கி ஜாமீனில் வந்தவர்: ஓசூர் வாலிபரை காரில் கடத்தி பழிக்கு பழியாக வெட்டி கொலை செய்த மர்ம நபர்கள்
- முரளி சமீபத்தில்தான் ஜாமீனில் வெளியே வந்திருந்தார்.
- பழிக்குப்பழியாக இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகின்றனர்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அந்திவாடியை சேர்ந்தவர் ரவி. இவருடைய மகன் முரளி (வயது 19). இவர் நேற்று மதியம் வீட்டில் இருந்துள்ளார்.
அப்போது அங்கு வந்த 2 மர்ம நபர்கள் முரளியை காரில் அழைத்து சென்றனர். மது குடிப்பதற்காக அவர்கள் சென்றதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அவர்கள் அலசநத்தம் சாலையில் பெத்தகொள்ளு என்னும் இடத்தில் உள்ள தனியார் லே-அவுட்டிற்கு சென்றனர்.
அங்கு மதுபாட்டில்கள் மற்றும் தின்பண்டங்களை எடுத்து வைத்த அவர்கள் திடீரென்று தாங்கள் வைத்திருந்த வீச்சரிவாளை எடுத்து முரளியை சரமாரியாக வெட்டினார்கள்.
இதில் கழுத்து உள்பட உடலில் 13 இடங்களில் சரமாரியாக அரிவாள் வெட்டு விழுந்தது.
இதனால் முரளி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்துள்ளார்.இதையடுத்து அவரை கொலை செய்த 2 பேரும் காரில் தப்பி சென்று விட்டனர்.
இந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் முரளி பிணமாக கிடந்ததை கண்ட அந்த பகுதி மக்கள் இது குறித்து ஓசூர் அட்கோ போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று முரளியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
விசாரணை குறித்து போலீசார் கூறியதாவது:-
ஓசூர் அந்திவாடியை சேர்ந்தவர் உதயகுமார் (32). ரியல் எஸ்டேட் அதிபர். இவர் கடந்த 28.2.2022 அன்று வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
அந்த கொலை வழக்கில் தற்போது கொலையாகி உள்ள முரளி, முதல் குற்றவாளியாக போலீசாரால் சேர்க்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் முரளி சமீபத்தில்தான் ஜாமீனில் வெளியே வந்திருந்தார். இந்த நிலையில் தான் அவரை, அந்த நபர்கள் வெட்டிக்கொலை செய்துள்ளனர். எனவே பழிக்குப்பழியாக இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகின்றனர்.
மேலும் இந்த கொலையில் தொடர்புடையவர்கள் யார்? என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






