என் மலர்
உள்ளூர் செய்திகள்

பரிகார பூஜைக்காக தூக்கி செல்லப்பட்ட சிவலிங்கம் அதே இடத்தில் மீண்டும் வைக்கப்பட்டதை படத்தில் காணலாம்.
சங்கமேஸ்வரர் கோவிலில் பரிகாரத்துக்காக சிவலிங்கத்தையே தூக்கி சென்ற வியாபாரி
- சங்கமேஸ்வரர் கோவில் சிறந்த பரிகார தலமாகவும் விளங்குகிறது.
- கோவில் வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர்.
பவானி
ஈரோடு மாவட்டம், பவானியில் பிரசித்தி பெற்ற சங்கமேஸ்வரர் கோவில் உள்ளது. மேலும் இந்த கோவிலுக்கு பின்புறம் உள்ள பவானி கூடுதுறை திருமண தோஷம், செவ்வாய் தோஷம், நாக தோஷம் நீங்க பரிகாரம் செய்வதற்கு உகந்த சிறந்த பரிகார தலமாகவும் விளங்குகிறது.
எனவே இங்கு தினமும் ஏராளமானோர் வந்து பரிகாரம் செய்து வருவது வழக்கம். அவ்வாறு கோவிலுக்கு பரிகாரம் செய்ய வந்த வியாபாரி ஒருவர் கோவில் வளாகத்தில் உள்ள சிவலிங்கத்தையே தூக்கி சென்ற சம்பவம் நடந்து உள்ளது. அதன் விவரம் வருமாறு:-
நேற்று காலை கோவில் ஊழியர்கள் பிரகாரத்தை சுற்றி வந்தனர். அப்போது கோவில் வில்வ மரத்தின் அடியில் வைக்கப்பட்டிருந்த சிவலிங்கத்தை அங்கு காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதைத்தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர்.
அப்போது காலை 6.30 மணி அளவில் காவி வேட்டி அணிந்து கொண்டு வந்த பக்தா் வில்வமரத்தின் அடியில் உள்ள சிவலிங்கத்தை பயபக்தியுடன் வழிபட்டார். பின்னர் அவர் சிவலிங்கத்தை அப்படியே தூக்கி சென்றதை கண்டனர். உடனே அவரை கோவில் ஊழியர்கள், பரிகார மண்டபத்தில் அவர் எங்கேனும் இருக்கிறாரா? என தேடினர். அப்போது அவர் சிவலிங்கத்தை வைத்து பரிகார பூஜை செய்து கொண்டிருந்ததை கண்டனர்.
உடனே அவரை அழைத்துக்கொண்டு வந்து ஊழியர்கள் விசாரணை நடத்தினர். விசாரணையில், 'அவர் சேலம் மாவட்டம் தாரமங்கலம் பகுதியில் உள்ள சிவன் கோவில் பகுதியில் உள்ள கடையில் தேங்காய், பழம் விற்பனை செய்பவர் என்பதும், 41 வயது ஆகியும் அவருக்கு திருமணம் ஆகவில்லை.
இதனால் அவர் ஜோசியம் பார்த்து உள்ளார். அப்போது ஜோதிடர் ஒருவர் அந்த வியாபாரியிடம் சிவலிங்கத்தை வைத்து பரிகார பூஜை செய்தால் திருமணம் நடக்கும் என கூறி உள்ளார்.
இதை நம்பிய அந்த வியாபாரி பவானி சங்கமேஸ்வரர் கோவிலுக்கு வந்து சிவலிங்கத்தை தூக்கி கொண்டு சென்று பரிகார பூஜை செய்ததும்,' தெரியவந்தது.
இதையடுத்து பரிகாரம் செய்வதற்காக தூக்கி கொண்டு சென்ற சிவலிங்கத்தை கோவில் ஊழியர்கள் கைப்பற்றி மீண்டும் வில்வ மரத்தடியில் வைத்தனர். மேலும் இதுபோன்ற காரியங்களில் ஈடுபடக்கூடாது எனவும் அந்த வியாபாரியை கோவில் ஊழியர்கள் எச்சரித்து அனுப்பி வைத்தனர். திருமணம் நடக்க வேண்டி செய்யக்கூடிய பரிகாரத்துக்கு சிவலிங்கத்தையே தூக்கி சென்ற சம்பவம் பவானி சங்கமேஸ்வரர் கோவில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.






