என் மலர்
உள்ளூர் செய்திகள்

கூடலூரில் ஆண் சிறுத்தை மர்ம சாவு
- சிறுத்தை அப்பகுதிக்கு வந்தது குறித்து வனத்துறையின் மோப்ப நாய் உதவியுடன் வனத்துறையினர் ஆய்வு நடத்தினர்.
- சிறுத்தை உயிரிழந்தது என கண்டுபிடிப்பதற்காக பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது.
கூடலூர்,
கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி பாரதி நகர் பகுதியில் உள்ள தனியார் தேயிலை தோட்டத்தில் சிறுத்தை இறந்து கிடப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து கூடலூர் கோட்ட வன அலுவலர் கொம்மு ஓம்காரம் தலைமையில் உதவி வனபாதுகாவலர் கருப்பையா, வனச்சரகர் யுவராஜ், வனவர் சுதீர்குமார் உள்ளிட்ட வனத்துறையினர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பின்னர் சிறுத்தை அப்பகுதிக்கு வந்தது குறித்து வனத்துறையின் மோப்ப நாய் உதவியுடன் வனத்துறையினர் ஆய்வு நடத்தினர். இருப்பினும் சிறுத்தை இறப்புக்கான காரணம் தெரியவில்லை. இதைத்தொடர்ந்து முதுமலை கால்நடை டாக்டர் ராஜேஷ் குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் வரவழைக்கப்பட்டனர். தொடர்ந்து சிறுத்தையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
மேலும் முக்கிய உடற்பாகங்களும் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. பின்னர் சிறுத்தை புலியின் உடல் அப்பகுதியில் தீ வைத்து எரிக்கப்பட்டது.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மர்மமான முறையில் சிறுத்தை இறந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, 6 வயதான ஆண் சிறுத்தை இறந்து 2 நாட்கள் இருக்கலாம்.
அதன் உடலில் காயங்கள் எதுவும் காணப்படவில்லை. இருப்பினும் எதனால் சிறுத்தை உயிரிழந்தது என கண்டுபிடிப்பதற்காக பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. அதன் பின்னரே இறப்புக்கான காரணம் தெரிய வரும் என்றனர்.






