search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாவடி பண்ணை முத்தாரம்மன் கோவில் கொடை விழா
    X

    முத்தாரம்மன் பொன் சப்பரத்தில் மாவடிபண்ணையில் வீதி உலா வந்த காட்சி.

    மாவடி பண்ணை முத்தாரம்மன் கோவில் கொடை விழா

    • ஆண்டுதோறும் ஆவணி மாதம் கடைசி செவ்வாய்கிழமை கொடை விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
    • கொடிமரத்திற்கு சிறப்பு பூஜை செய்து கால் நாட்டு விழா நடைபெற்றது.

    தென்திருப்பேரை:

    தூத்துக்குடி மாவட்டம் ஏரல் வட்டம் தென் திருப்பேரை பேரூராட்சி மாவடி பண்ணை முத்தாரம்மன் கோவிலில் கொடை விழா நேற்று நடைபெற்றது.

    மாவடிபண்ணை 18பங்கு நாடார்களுக்கு பாத்தியப்பட்ட முத்தாரம்மன் கோவிலில் சிவன், சக்தி மற்றும் முத்தாரம்மன் ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் அமர்ந்து அருள்பாலித்து வருகிறார்கள்.

    ஆண்டுதோறும் ஆவணி மாதம் கடைசி செவ்வாய்கிழமை கொடை விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கொடை விழாவை முன்னிட்டு கடந்த 6-ந் தேதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் தீபாராதனை நடந்தது.

    தொடர்ந்து கோவிலில் கொடிமரத்திற்கு சிறப்பு பூஜை செய்து கால் நாட்டு விழா நடைபெற்றது.அன்று முதல் பக்தர்கள் விரதம் கடைபிடித்து வருகின்றனர். திங்கட்கிழமை இரவு குடி அழைப்பு மற்றும் அம்மனுக்கு தீபாராதனை பூஜைகள் நடைபெற்றது. நேற்று காலை 10 மணிக்கு மேள வாத்தியங்களுடன் சாமி ஊர்வலத்துடன் பால்குடம் எடுத்து வருதல், மதியம் 1 மணிக்கு சிறப்பு பூஜை அலங்காரத்துடன் மதியக் கொடை, இரவு 8 மணிக்கு முளைப்பாரி எடுத்து வருதல், நேர்த்தி கடன் ஆகியவை நடைபெற்றது. இரவில் வில்லிசை நிகழ்ச்சி, நாதஸ்வரம், கரகாட்டம் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    காலை, மதியம் மற்றும் இரவு அன்னதானம் நடைபெற்றது. இரவு 12 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை தீபாராதனையும், அதை தொடர்ந்து முத்தாரம்மன் பொன் சப்பரத்தில் எழுந்தருளி வாண வேடிக்கையுடன் வீதிஉலா செல்லும் முக்கிய நிகழ்ச்சி நடைபெற்றது.

    இன்று மதியம் பொங்கலிடுதல் மற்றும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சிக்காக ஏற்பாடுகள் கோவில் நிர்வாகத்தினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து இருந்தனர்.

    Next Story
    ×