என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மூலம் 885 பயனாளிகள் பயிற்சி பெற்றுள்ளனர்
    X

    வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மூலம் 885 பயனாளிகள் பயிற்சி பெற்றுள்ளனர்

    • வாழ்ந்து காட்டுவோம் திட்டம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு செயல்பட்டு வருகிறது.
    • இதன் மூலம் 885 பயனாளிகள் பயிற்சி பெற்றுள்ளனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம் புத்துணர்வு பெற்று பல மேம்பாடுகள் செய்யப்பட்டு வாழ்ந்து காட்டுவோம் திட்டம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு செயல்பட்டு வருகிறது.

    இந்த திட்டம் உலக வங்கியின் நிதி உதவியுடன் தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் கீழ் செயல்படும் திட்டம் ஆகும்.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பர்கூர், காவேரிப்பட்டணம் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய 3 ஒன்றியங்களில் உள்ள 102 ஊராட்சிகளில் இந்த திட்டம் செயல்பட்டு வருகிறது.

    இந்த திட்டத்தின் மூலமாக சமுதாய பண்ணைப்பள்ளிக்கு ரூ.1 கோடியே 28 லட்சத்து 82 ஆயிரத்து 800 நிதி வழங்கப்பட்டுள்ளது.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 145 சமுதாய பண்ணைப்பள்ளிகள் செயல்பட்டு கொண்டு வருகின்றன. இதன் மூலம் 4,350 பயனாளிகள் பயிற்சி பெற்றுள்ளனர்.

    மேலும் தொழில் முனைவோர்களுக்கு பயிற்சிக்கும் சமுதாய திறன் பள்ளிகள் 21 செயல்பட்டு வருகின்றன. இதில் தொழிலுக்கு தேவையான திறன் பயிற்சியை ஏற்கனவே அத்தொழிலில் தகுதி வாய்ந்த அனுபவம் பெற்றவர் மூலமாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

    ஒவ்வொரு சமுதாய திறன் பள்ளிக்கும் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் பயிற்சிக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் நிதி மானியமாக வழங்கப்படுகிறது. இதுவரை ரூ.16 லட்சத்து 25 ஆயிரம் கொடுக்கப்பட்டுள்ளது. பயிற்சி முடிந்த பின் சுய வேலைவாய்ப்பு மற்றும் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கப்படுகிறது. இதன் மூலம் 885 பயனாளிகள் பயிற்சி பெற்றுள்ளனர்.

    ஆகவே தனிநபர் தொழில் செய்வோர் அல்லது தொழில் தொடங்க விரும்புபவர்கள் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் மானியத்துடன் கூடிய கடனுதவியை பெற்று பயனடையலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×