search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தருமபுரி நகராட்சியில் சரியான பராமரிப்பு இல்லாததால்பாதாள சாக்கடையில் இருந்து வெளியேறும் கழிவுநீர்
    X

    4 ரோடு அருகே தருமபுரி-கிருஷ்ணகிரி சாலையில் பாதாள சாக்கடை கால்வாயில் இருந்து வெளியேறி கழிவு நீர் ஆறாக ஓடுவதை படத்தில் காணலாம்.

    தருமபுரி நகராட்சியில் சரியான பராமரிப்பு இல்லாததால்பாதாள சாக்கடையில் இருந்து வெளியேறும் கழிவுநீர்

    • பாதசாரிகளும் அப்பகுதியில் உள்ள வணிக நிறுவனங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களும் துர்நாற்றத்தால் அவதிக்குள்ளாகினர்.
    • ரெட்டேரியில் பாதாள சாக்கடை குழாய் உடைந்து ஏரி முழுவதும் கழிவுநீர் தேங்குவதால் அப்பகுதி குடியிருப்பு வாசிகள் நோய் தொற்றுக்கு ஆளாகி அவதிக்குள்ளாகி உள்ளனர்.

    தருமபுரி,

    தருமபுரி நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளது. இந்த வார்டுகளில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

    நகராட்சியில் உள்ள வீடுகள், கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர், சனத்குமார் நதியின் கால்வாய் மற்றும் ராமாக்காள் ஏரியில் கலந்து வந்த நிலையில் கடந்த 2010-ம் ஆண்டு, தி.மு.க. ஆட்சியில் தருமபுரி நகராட்சியில், ரூ.32 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை திட்டம் தொடங்கியது.

    முதற்கட்டமாக 19 வார்டுகளில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. பாதாள சாக்கடை திட்ட கழிவுநீரை ஒருங்கிணைத்த மதிகோன்பாளையம் மற்றும் காந்திபாளையத்தில் உள்ள சுத்தகரிப்பு நிலையத்திற்கு சென்று அங்கிருந்து சுத்தகரிக்கப்பட்ட கழிவு நீர் சனத்குமார் நதியில் விடப்பட்டது.

    இந்த நிலையில் தற்போது நகராட்சி நிர்வாகத்தின் சரியான பராமரிப்பு இல்லாததால் தருமபுரி நகரில் உள்ள முகமது அலி கிளப் ரோடு, நேதாஜி பைபாஸ் சாலை, பிடமனேரி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் அவ்வப்போது பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறி வருவதும், அதனை நகராட்சி நிர்வாகம் அடைப்பை சீர் செய்வதுமாக இருந்து வந்தது.

    இந்த நிலையில் தருமபுரி புறநகர் பஸ் நிலையம், நகர பஸ் நிலையத்திற்கு இடையே முகமது அலி கிளப் சாலையில் மாதக்கணக்கில் பாதாள சாக்கடை அடைப்பு சீர் செய்யப்படாமல் இருந்து வந்தது. பின்னர் நகராட்சி நிர்வாகம் பல மாதங்கள் கழித்து அடைப்பை சீர் செய்தது. வார்டுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் 4 ரோடு பகுதி, தருமபுரி-கிருஷ்ணகிரி சாலையில் சென்று மதிகோன்பாளையம் வழியாக சுத்தகரிப்பு நிலையத்திற்கு கழிவுநீர் சென்று வந்தது.

    இந்த நிலையில் நேற்று 4 ரோடு அருகே தருமபுரி-கிருஷ்ணகிரி சாலையில் பாதாள சாக்கடை கழிவுநீர் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் வெளியேறி சாலையில் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி வந்தது. சாலையில் வாகனத்தில் செல்வோரும், பாதசாரிகளும் அப்பகுதியில் உள்ள வணிக நிறுவனங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களும் துர்நாற்றத்தால் அவதிக்குள்ளாகினர்.

    இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது, நகராட்சியின் பராமரிப்பின்மையால் தான் இது போன்ற அவலங்கள் நடந்தேறி வருகிறது. அதேபோல் ரெட்டேரியில் பாதாள சாக்கடை குழாய் உடைந்து ஏரி முழுவதும் கழிவுநீர் தேங்குவதால் அப்பகுதி குடியிருப்பு வாசிகள் நோய் தொற்றுக்கு ஆளாகி அவதிக்குள்ளாகி உள்ளனர் என்றார்.

    தருமபுரி 4 ரோடு பகுதியில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு சாலையில் ஆறாக ஓடும் கழிவு நீரால் பொதுமக்களுக்கு நோய் தொற்று பரவுவதற்குள் நகராட்சி நிர்வாகம் பாதாள சாக்கடையை முறையாக பராமரிக்க வேண்டுமென பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×