என் மலர்
உள்ளூர் செய்திகள்

கே.ஆர்.பி. அணையின் நீர் இருப்பு குறைப்பு
- 5 நீர் உறிஞ்சு கிணறுகள் ஆற்றின் தரைமட்ட அளவு வரை முடிக்கப்பட்டுள்ளது.
- ஆற்றின் தரை மட்டத்திற்கு மேல் மூன்றரை மீட்டர் உயரத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் நிலுவையில் உள்ளன.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட குடிநீர் திட்டப்பணிகளுக்காக, கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையின் நீர் இருப்பை 43 அடியாக குறைக்க தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. வேப்பனப்பள்ளி ஒன்றியம் 15 ஊராட்சிகள், எண்ணேக்கொள்புதூர் மற்றும் 122 குடியிருப்புகளுக்கு குடிநீர் வழங்க ரூ.31 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆண்டு பராமரிப்பு செலவிற்காக ரூ.79 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.
இது குறைந்தபட்ச தேவை நிதி திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படுகிறது. இந்த நிலையில் இத்திட்டத்தின் கீழ் தென்பெண்ணை ஆற்றின் கரையோரத்தில் தவளம் கிராமம் அருகே 6 நீர் உறிஞ்சுகிணறுகள் அமைக்கப்பட உள்ளது இதில், 5 நீர் உறிஞ்சு கிணறுகள் ஆற்றின் தரைமட்ட அளவு வரை முடிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆற்றின் தரை மட்டத்திற்கு மேல் மூன்றரை மீட்டர் உயரத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் நிலுவையில் உள்ளன. இந்த கிணறுகள் அமைக்கும் பணிகளுக்காக, அணையின் நீர்மட்டத்தை 43 அடியாக குறைக்கப்படுகிறது.
இருப்பினும் இதனால் கிருஷ்ணகிரி அணையின் கீழ், முதல்போக பாசனத்திற்கும், குடிநீருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே குடிநீர் திட்டப் பணிக்காக கிருஷ்ணகிரி அணையின் நீர்மட்டத்தை 43 அடியாக குறைக்க அரசாணை பெறப்பட்டு நேற்று முன்தினம் முதல் 9 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. நேற்று அணைக்கு நீர்வரத்து 350 கன அடியாக இருந்த நிலையில், அணையின் மொத்த உயரமான 52 அடியில் நேற்று 47.15 அடியாக நீர்மட்டம் இருந்தது.






