search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொடைக்கானல் பேரிஜம் ஏரிக்கு செல்ல கட்டணம் உயர்வு
    X

    கட்டண உயர்வு குறித்து வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகை.

    கொடைக்கானல் பேரிஜம் ஏரிக்கு செல்ல கட்டணம் உயர்வு

    • தற்போது எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் பேரிஜம் செல்லும் நுழைவாயில் கட்டணத்தை வனத்துறை உயர்த்தியுள்ளது
    • வாடகை வாகன கட்டணத்தை தாங்கள் மீண்டும் உயர்த்தும் நிலையில் சுற்றுலா பயணிகள் பேரிஜம் ஏரிக்கு செல்லும் பயணத்தை ரத்து செய்து விடுவார்கள்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் சர்வதேச அளவில் புகழ்பெற்று விளங்கும் ஒரு சுற்றுலா தலமாகும். இங்கு வனத்துறை, தோட்டக்கலை துறை, நகராட்சி மற்றும் தனியார் இடங்களில் உள்ள சுற்றுலாத் தலங்கள் அதிகமாக உள்ளன. இதில் கட்டணம் மற்றும் கட்டணமில்லாத சுற்றுலா தலங்களும் உள்ளன. குறிப்பாக வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் அதிகமாக சுற்றுலா பயணிகள் பார்த்து மகிழ்ந்து செல்கி ன்றனர். வனத்துறையினர் அவ்வப்போது கட்டணங்களை உயர்த்துவது நடைமுறையாக உள்ளது.

    ஒரு சில நேரங்களில் எதிர்ப்புகள் எழும் நிலையில் சிறிதளவு கட்டணத்தை கண் துடைப்பிற்காக குறைப்பதும் வாடிக்கையாக உள்ளது. உள்ளூர் வாடகை வாகன ஓட்டுநர்கள், வாடகை வாகன உரிமையாளர்கள் ஆகியோர்களை அழைத்து கட்டணங்களை உயர்த்தும் போது எப்போதாவது வனத்துறையினர் ஆலோசனை நடத்துவது வழக்கம். ஆனால் தற்போது எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் பேரிஜம் செல்லும் நுழைவாயில் கட்டணத்தை வனத்துறை உயர்த்தியுள்ளது.இதனால் பல்வேறு தரப்பினரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.உள்ளூர் வாகன ஓட்டிகள் மற்றும் வெளியூரிலிருந்து வரும் வாடகைக்கு வாகன ஓட்டுநர்களும் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏற்கனவே பெட்ரோல் டீசல் உயர்த்தியதால் தங்களது வாடகை கட்டணத்தை உயர்த்தி உள்ளதாகவும், இதே போல் வனத்துறை சுற்றுலா தலங்களிலும் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளதால் தாங்களும் வாடகை கட்டணத்தை உயர்த்திக் கொண்டே போவதாகவும் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில் மீண்டும் பேரிஜம் செல்லும் நுழைவாயில் கட்டணத்தை உயர்த்தி உள்ளதால் வாடகை வாகன கட்டணத்தை தாங்கள் மீண்டும் உயர்த்தும் நிலையில் சுற்றுலா பயணிகள் பேரிஜம் ஏரிக்கு செல்லும் பயணத்தை ரத்து செய்து விடுவார்கள்.

    தங்களுக்கு இதனால் பெரும் இழப்பு ஏற்படும் என்றும் வனத்துறையினர் அடிக்கடி கட்டணங்களை உயர்த்துவதால் தங்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். தற்போது கார்களுக்கு 300 ரூபாயாகவும், வேன்களுக்கு 600 ரூபாயாகவும் உயர்த்தி உள்ளதை மறு பரிசீலனை செய்து முன்பு போல கார்களுக்கு 200, வேன்களுக்கு 300 ரூபாய் என நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே தங்களின் வேண்டுகோளாக உள்ளதாக வாடகை வாகன ஓட்டுநர்கள் கூறுகின்றனர்.

    Next Story
    ×