என் மலர்
உள்ளூர் செய்திகள்

புகழூர், பாப்புலர் முதலியார் வாய்க்கால்களில் பராமரிப்பு பணிக்காக தண்ணீர் நிறுத்துவது குறித்து ஆலோசனை கூட்டம்
- பராமரிப்பு பணி மேற்கொள்வதற்காக தண்ணீர் நிறுத்துவது குறித்து விவசாயிகளுடனான ஆலோசனைக் கூட்டம் புகழிமலை அடிவாரத்தில் உள்ள மண்டபத்தில் நடைபெற்றது.
- கூட்டத்தில் நகராட்சி துணைத் தலைவர் பிரதாபன் மற்றும் புகழூர் வாய்க்கால் பாசன விவசாயிகள் கலந்து கொண்டனர்.
வேலாயுதம்பாளையம்
கரூர் மாவட்ட பொதுப்பணித் துறையின் நீர்வளத் துறை சார்பில் புகளூர் வாய்க்கால் மற்றும் பாபுலர் முதலியார் வாய்க்காலில் பராமரிப்பு பணி மேற்கொள்வதற்காக தண்ணீர் நிறுத்துவது குறித்து விவசாயிகளுடனான ஆலோசனைக் கூட்டம் வேலாயுதம்பாளையம் புகழிமலை அடிவாரத்தில் உள்ள மண்டபத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு புகழூர் நகராட்சித் தலைவர் சேகர் குணசேகரன் தலைமை வைத்தார். குளித்தலை நீர்வளத்துறையின் ஆற்றுப் பாதுகாப்பு கோட்ட உதவி செயற்பொறியாளர் சிங்காரவேல் முன்னிலை வைத்தார். நீர்வளத்துறை ஆற்றுப் பாதுகாப்பு பிரிவு உதவி பொறியாளர் கார்த்திக் வரவேற்றார்.
நொய்யல் முதல் வாங்கல் வரை பாயும் விவசாய பாசன வாய்க்கால்களான புகழூர் வாய்க்கால், பாப்புலர் முதலியார் வாய்க்கால்களில் மதகுகள் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வது தொடர்பாக விவசாயிகளிடம் ஆலோசனை நடத்தப்பட்டது.
அப்போது நீர்வளத்துறை அதிகாரிகள் தீபாவளி பண்டிகை முடிந்தவுடன் புகழூர் வாய்க்கால் மற்றும் பாபுலர் முதலியார் வாய்க்காலில் பராமரிப்பு பணிக்காக பாசனத்திற்கு திறந்து விடப்படும் தண்ணீர் நிறுத்தப்படும். அதன் பின்னர் புகழூர் மற்றும் பாப்புலர் வாய்க்கால்களில் மதகுகள் மற்றும் பல்வேறு பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதாகவும் தெரிவித்தனர்.
அதற்கு விவசாயிகள் தற்பொழுது பாசனத்திற்கு விடப்பட்டுள்ள தண்ணீரை நிறுத்தினால் விவசாய பயிர்கள் கருகும் நிலை ஏற்படும் அதனால் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்படுவார்கள்.
எனவே வரும் மே , ஜூன் மாதங்களில் புகழூர் மற்றும் பாபுலர் முதலியார் வாய்க்காலில் தண்ணீரை நிறுத்திவிட்டு பணிகளை மேற்கொள்ளலாம் என்று ஆலோசனைகளை தெரிவித்தனர்.
கூட்டத்தில் நகராட்சி துணைத் தலைவர் பிரதாபன் மற்றும் புகழூர் வாய்க்கால் பாசன விவசாயிகள் கலந்து கொண்டனர்.






