search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தடை செய்யப்பட்ட குஞ்சு மீன்களை பிடித்து வந்தால் படகுகள் பறிமுதல் செய்யப்படும் மீனவர் குறைதீர்க்கும் கூட்டத்தில் அதிகாரி எச்சரிக்கை
    X

    தடை செய்யப்பட்ட குஞ்சு மீன்களை பிடித்து வந்தால் படகுகள் பறிமுதல் செய்யப்படும் மீனவர் குறைதீர்க்கும் கூட்டத்தில் அதிகாரி எச்சரிக்கை

    • நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் மீனவர் குறைதீர்க்கும் கூட்டம் இன்று நடந்தது.
    • இரட்டை மடியை பயன்படுத்தி மீனவர்கள் மீன்பிடித்து வருவதால் மீன்வளம் பாதிக்க கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது.

    நாகர்கோவில் : நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் மீனவர் குறைதீர்க்கும் கூட்டம் இன்று நடந்தது. மீனவர்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை கலெக்டர் ஸ்ரீதர் பெற்றுக்கொண்டார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி பாலசுப்பிரமணியன், மீன்வளத்துறை துணை இயக்குனர் காசிநாத பாண்டியன் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

    கூட்டத்தில் மீனவர்கள் கூறியதாவது:- குமரி மாவட்டத்தில் உள்ள கடற்கரை பகுதிகளில் இரட்டை மடியை பயன்படுத்தி மீனவர்கள் மீன்பிடித்து வருவதால் மீன்வளம் பாதிக்க கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. இரட்டை மடி வலையை பயன்படுத்தக்கூடாது என்று அரசு சட்டம் வைத்துள்ளது. ஆனால் அதையும் மீறி மீனவர்கள் மீன்பிடித்து வருகிறார்கள்.

    இது தொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இரட்டை மடி வலையை பயன்படுத்தி மீன் பிடிக்கும் மீனவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தேங்காய் பட்டணம் துறைமுகத்தில் தடை செய்யப்பட்ட குஞ்சு மீன்களை பிடித்து வருகிறார்கள். இது தொடர்பாக நேற்று அதிகாரிகளுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. இதுவரை அந்த படகு மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    தமிழக அரசு மீனவர்களுக்கு மானிய விலை மண்எண்ணை வழங்கி வருகிறது. தற்பொழுது புதிதாக விண்ணப்பித்தவர் பலருக்கும் மண்எண்ணை வழங்காமல் உள்ளனர். முறையான ஆவணங்கள் சமர்ப்பித்த பிறகும் மண்எண்ணை வழங்கப்படவில்லை. உடனடியாக மண்எண்ணை வழங்காவிட்டால் மீனவர்கள் சார்பில் போராட்டம் நடத்தப்படும். மேல்மிடாலம் பகுதியில் மீன் பிடி இறங்குதளம் அமைக்க வேண்டும். கேசவன் புத்தன் துறை பகுதியில் சேதமடைந்த தூண்டில் வளைவை சீரமைக்க வேண்டும். ஏ.வி.எம். கால்வாயை தூர்வார வேண்டும். கடற்கரை கிராமங்களில் பழுதான சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    இதற்கு பதில் அளித்து அதிகாரி கூறுகையில், குமரி மாவட்டத்தில் இரட்டை மடி மீன் வலையை பயன்படுத்தி மீன் பிடிப்பவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக அதிகாரிகள் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள். 14 நாட்டிங்கல் வரை மீன்துறை அதிகாரிகள் சென்று கண்காணித்து வருகிறார்கள். கடலோர பாதுகாப்பு படையினரும் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள். தேங்காய்பட்டினத்தில் குஞ்சு மீன்களை பிடித்து வரும் படகுகளை பறிமுதல் செய்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    மீனவர்களுக்கு மானிய விலையில் மண்எண்ணை வழங்குவது தொடர்பாக நடவடிக்கை எடுத்து வருகிறோம். மேல்மிடாலத்தில் ரூ.35 கோடி செலவில் மீன்பிடி இறங்குதளம் அமைக்க திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும். கேசவன் புத்தன் துறையில் தூண்டில் வளைவு சீரமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×