அனுமதியின்றி கனிம வளம் ஏற்றி சென்றதை தடுத்தகிராம நிர்வாக அலுவலரை தாக்கி மிரட்டல்

ஒருவர் கைது; 2 டிரைவர்களுக்கு வலைவீச்சுஜே.சி.பி. மூலம் டெம்போவில் கனிமவள கற்கள்
அனுமதியின்றி கனிம வளம் ஏற்றி சென்றதை தடுத்தகிராம நிர்வாக அலுவலரை தாக்கி மிரட்டல்
Published on

நாகர்கோவில் : குளச்சல் அருகே ரீத்தாபுரம் பேரூராட்சி கரையாகுளம் பகுதியில் ரீத்தாபுரம் கிராம நிர்வாக அலுவலகம் உள்ளது. இங்கு கிராம நிர்வாக அலுவலராக கலைச்செல்வன் (வயது 31) என்பவர் வேலை பார்த்து வருகிறார்.நேற்று மதியம் இந்த கிராம நிர்வாக அலுவலக எல்லைக்குட்பட்ட குளவிளை முண்டன்பிலா விளையில் அனுமதியின்றி கனிமவள கற்கள் டெம்போவில் ஏற்றி செல்லப்படுவதாக கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வனுக்கு தகவல் கிடைத்தது. உடனே அவர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார். அப்போது அங்கு ஜே.சி.பி. மூலம் டெம்போவில் கனிமவள கற்கள் ஏற்றிக்கொண்டிருந்தனர். அதை கண்டதும் அவர் டெம்போவில் கற்கள் ஏற்றுவதை தடுத்தார். அப்போது அங்கு நின்ற ஆனக்குழியை சேர்ந்த விஜயகுமார் (50) என்பவர் கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வனை பிடித்து தள்ளிவிட்டார். அதே நேரத்தில் டெம்போ டிரைவர் வேகமாக ஓட்டி தப்பி சென்று விட்டார். இந்த சம்பவம் குறித்து கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வன் குளச்சல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் விஜயகுமார் மற்றும் ஜே.சி.பி. டிரைவர், டெம்போ டிரைவர் ஆகியோர் மீது அரசு பணி செய்யவிடாமல் தடுத்தது, மிரட்டல் விடுத்தது உள்பட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். அவர்களில் விஜயகுமாரை கைது செய்து, ஜே.சி.பி.யையும் பறிமுதல் செய்தனர். தப்பி சென்ற ஜே.சி.பி. மற்றும் டெம்போ டிரைவர்களை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com