search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலையை சுற்றி 140 அடி உயரத்துக்கு சாரம் அமைக்கும் பணி முடிந்தது
    X

    கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலையை சுற்றி 140 அடி உயரத்துக்கு சாரம் அமைக்கும் பணி முடிந்தது

    • சிலை கடல் உப்புக்காற்றினால் பாதிப்படையாமல் இருப்பதற்காக 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை ரசாயன கலவை பூசப்படுவது வழக்கம்
    • சென்னை மற்றும் தூத்துக்குடியில் இருந்து 80 டன் இரும்பு குழாய்கள் கன்னியாகுமரிக்கு கொண்டு வரப்பட்டது

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை எழுப்பப்பட்டு உள்ளது. இந்த சிலை கடந்த 2000-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ந்தேதி அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது. இந்த திருவள்ளுவர் சிலையை தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் படகில் சென்று கண்டு களித்து வருகின்றனர்.

    இந்த சிலை கடல் உப்புக்காற்றினால் பாதிப்படையாமல் இருப்பதற்காக 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை ரசாயன கலவை பூசப்படுவது வழக்கம். கடந்த 2017 -ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கடைசியாக ரசாயனகலவை பூசப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டில் ரசாயன கலவை பூசஅரசுநடவடிக்கை மேற்கொண்டது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக பணி நடைபெற வில்லை.

    தற்போது ரூ.1கோடி செலவில் திருவள்ளுவர் சிலையில் இந்த ரசாயனக் கலவை பூசும் பணி நடைபெற உள்ளது. இந்தப்பணி நடைபெற உள்ளதை தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் 6-ந்தேதி முதல் வருகிற நவம்பர் மாதம் 2-ந் தேதி வரை 5 மாதங்களுக்கு திருவள்ளுவர் சிலையை பார்வையிட சுற்றுலா பயணி களுக்கு அனுமதி இல்லை என்று தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் அறிவித்து உள்ளது.

    இந்த நிலையில் இந்த பணியை அமைச்சர் மனோ தங்கராஜ் கடந்த ஜூன் மாதம் 6 -ந்தேதி தொடங்கி வைத்தார்.முதற்கட்டமாக இந்த சிலையை சுற்றிலும் இரும்பு குழாய்கள் மூலம் சாரம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக சென்னை மற்றும் தூத்துக்குடியில் இருந்து 80 டன் இரும்பு குழாய்கள் கன்னியாகுமரிக்கு கொண்டு வரப்பட்டது. இவை படகுகள் மூலம் திருவள்ளு வர் சிலை அமைந்துஉள்ள பாறைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த நிலையில் திருவள்ளுவர் சிலையயை சுற்றி ரசாயன கலவை பூசுவதற்காக இரும்பு பைப்புகளால் சாரம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    தற்போது முதல் கட்டமாக திருவள்ளுவர் சிலையின் பீடத்தைச் சுற்றி இரும்பு பைப்புகளால் சாரம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் தற்போது 140அடி உயரத்துக்கு திருவள்ளுவர் சிலையின் வெளிப்புறத்தை சுற்றி சாரம் அமைக்கும் பணி முடிவடைந்து உள்ளது. தற்போது திருவள்ளுவர் சிலையின் கால் பாதத்தில் இருந்து கொண்டை பகுதி வரை சாரம் அமைக்கும் பணி நடைபெற்று உள்ளது. அடுத்த கட்டமாக ரசாயனக் கலவை பூசுவதற்காக சிலை முழுவதும் நல்ல தண்ணீர் மூலம் கழுவி சுத்தம் செய்யப்படுகிறது.

    அதற்கு அடுத்த கட்டமாக சிலையின் ஒவ்வொரு பகுதியில் உள்ள சிமெண்ட் பாய்ண்ட்களில் படிந்திருக்கும் கடல் உப்பு தன்மையை அகற்றும் பணி நடக்கிறது. இறுதியாக சிலையின் மீது ரசாயன கலவை பூசப்படுகிறது.

    Next Story
    ×