search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குலசேகரம் அருகே சானலில் பிணமாக மிதந்தவர் தென்காசி மாவட்டத்தை சேர்ந்தவர்
    X

    குலசேகரம் அருகே சானலில் பிணமாக மிதந்தவர் தென்காசி மாவட்டத்தை சேர்ந்தவர்

    • மாரி சிவபாலன் என்பவர் மாயமாகி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • மாரி சிவபாலனின் உடல் இன்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.

    திருவட்டார் :

    குலசேகரம் அருகே சுருளோடு பகுதியில் உள்ள தோவாளை செல்லும் சானலில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு சுமார் 40 வயது மதிக்கத்தக்க வாலிபரின் உடல் மிதந்து வந்தது. அதனை போலீசார் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    பிணமாக மிதந்து வந்தவரின் முகம் சிதைந்த நிலையில் காணப்பட்டது. அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? எப்படி இறந்தார்? என்பது குறித்து குலசேகரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    குமரி மாவட்டத்தில் காணாமல் போனவர்களின் தகவல்களையும் சேகரித்து வந்தனர். அப்போது குலசேகரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவருக்கு உதவியாக இருந்த தென்காசி மாவட்டம் கடையம் வெய்க்காலிபட்டி பகுதியை சேர்ந்த மாரி சிவபாலன் என்பவர் மாயமாகி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இது தொடர்பாக குலசேகரம் போலீசில் புகார் இருப்பதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து மாரி சிவபாலனின் உறவினர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    அதன்பேரில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனை வந்த அவர்கள், அங்கிருந்த உடலை பார்த்து அது மாரிசிவபாலன் தான் என உறுதி செய்தனர். அவர் அணிந்து இருந்த சட்டை, கை கடிகாரம் ஆகியவற்றை போலீசார் காண்பித்தனர். அதனை பார்த்த மாரிசிவபாலனின் தங்கை, அது தனது அண்ணனுடையது என தெரிவித்தார்.

    குலசேகரம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற உறவினருக்கு துணையாக இருந்த மாரி சிவபாலன், சானலில் தவறி விழுந்து இறந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. இறந்த மாரி சிவபாலனின் உடல் இன்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.

    Next Story
    ×