search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போக்குவரத்து போலீசார் இல்லாததால் சாலையை கடக்க திண்டாடும் மாணவ-மாணவிகள்
    X

    போக்குவரத்து போலீசார் இல்லாததால் சாலையை கடக்க திண்டாடும் மாணவ-மாணவிகள்

    • உரிய நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள்
    • அந்த வழியாக செல்லும் வாகனங்களின் வேகம் மாணவ, மாணவிகளை மிரள செய்கிறது.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி- நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் கன்னியாகுமரியில் இருந்து 5-வது கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கொட்டாரம்.

    இந்த ஊரின் சந்திப்பில் அரசு மேல்நிலைப்பள்ளி, மற்றொருபுறம் அரசு தொடக்கப் பள்ளி, அதன் எதிர்புறம் தபால் நிலையம் உள்ளது. இந்த சந்திப்பில் இருபுறமும் ஓட்டல் மற்றும் கடைகளும் உள்ளன. கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் மார்க்கமாக ஏராளமான சுற்றுலா வாகனங்கள், கனரக வாகனங்கள், கார், பஸ் மற்றும் இருசக்கர வாகனங்கள் உள்பட ஏராளமான வாகனங்கள் இந்த சந்திப்பு வழியாக அடிக்கடி சென்று வருகின்றன. இதனால் கொட்டாரம் சந்திப்பு பகுதி கடும் போக்குவரத்து நெருக்கடி மிகுந்த பகுதியாக உள்ளது.

    காலை பள்ளி தொடங்கும் நேரத்திலும், மாலையில் பள்ளி முடியும் நேரத்திலும் மாணவ, மாணவிகள் இந்த ரோட்டை கடக்க பெரும் சிரமப்படுகிறார்கள். முன்பு "பீக் அவர்ஸ்" எனப்படும் காலை 8 மணி முதல் 10 மணி வரையிலும் மாலை 3 மணி முதல் 5 மணி வரையிலும் இந்த பள்ளிகள் முன்பு போக்குவரத்து போலீசார் நின்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவது வழக்கம். கொட்டாரம் சந்திப்பில் இரவு 8 மணி வரை போலீசார் நின்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவார்கள்.

    ஆனால் சமீபகாலமாக இந்த பகுதிகளில் போக்குவரத்து போலீசாரை காண முடிவதில்லை. பள்ளிக்கூடம் முன்பு காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து போலீசார் இல்லாததால் மாணவ-மாணவிகள் ரோட்டை கடந்து செல்ல முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அந்த வழியாக செல்லும் வாகனங்களின் வேகம் மாணவ, மாணவிகளை மிரள செய்கிறது.

    தற்போது பள்ளிகள் திறந்து 5 நாட்களுக்கு மேல் ஆன பிறகும் இதுவரை போக்குவரத்து போலீசார், பள்ளிகள் முன்பு போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் நியமிக்கப்படவில்லை. இதனால் இந்த பள்ளிக்கூடத்தில் பணிபுரியும் ஆசிரியர்களே சில சமயங்களில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபடுகிறார்கள். போக்குவரத்து நெருக்கடியால் பெரும்பாலான நேரங்களில் விபத்துகளும் நேரிடுகிறது. போக்குவரத்து போலீசார் பலர் வேறு பணிகளுக்கு சென்று விடுவதால் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஆள் இல்லாமல் இருப்பதாக கூறப்படுகிறது.

    விபத்துக்கள் அதிகரித்து வரும் வேளையில் இது போன்ற காரணங்களை காட்டாமல், பள்ளி மாணவ-மாணவிகளின் நலன் கருதி கொட்டாரம் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு தொடக்கப்பள்ளி முன்பு காலை மற்றும் மாலை வேளைகளில் போக்குவரத்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்று பெற்றோர்கள், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×