search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விநாயகர் சிலைகள்-பிரதிஷ்டை தொடர்பாக இந்து அமைப்பு நிர்வாகிகளுடன் கலெக்டர் ஆலோசனை
    X

    விநாயகர் சிலைகள்-பிரதிஷ்டை தொடர்பாக இந்து அமைப்பு நிர்வாகிகளுடன் கலெக்டர் ஆலோசனை

    • கட்டுப்பாடுகள் குறித்து விளக்கினார்
    • பிரதிஷ்டை செய்யப்படும் சிலைகள் 22, 23, 24 ஆகிய தேதிகளில் கரைக்கப்படுகிறது

    நாகர்கோவில் :

    விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 18-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையடுத்து குமரி மாவட்டத்தில் இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை மற்றும் ஊர்வலங்களுக்கு போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.

    இதுதொடர்பாக இந்து அமைப்பு நிர்வாகிகளுடன் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அதிகாரி பாலசுப்பிரமணியன், கோட்டாட்சியர் சேதுராமலிங்கம், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    அகில பாரத இந்து மகா சபா தலைவர் பாலசுப்பிரமணியன், இந்து முன்னணி மாவட்ட தலைவர் கிருஷ்ணகுமார் மற்றும் சிவசேனா, பா.ஜனதா கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். அவர்கள் தரப்பில், சிலை கரைக்கப்படும் இடங்களில் மின்சார வசதி ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக சொத்தவிளை பகுதியில் மின்விளக்கு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊர்வலங்கள் சொல்லும் பகுதிகளில் மரக்கிளைகள் அதிகளவு உள்ளது. அந்த மரக்கிளைகளை வெட்டி அப்புறப்படுத்த வேண்டும். கீரிப்பாறை பகுதியில் புதிதாக விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும். ஆட்டோக்களில் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்ல அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரீதர் பேசிய போது கூறியதாவது:-

    விநாயகர் சதுர்த்தி அன்று பிரதிஷ்டை செய்யப்படும் சிலைகள் 22, 23, 24 ஆகிய தேதிகளில் கரைக்கப்படுகிறது. சிலைகள் கரைப்பதற்கு 10 இடங்களில் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது. விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை மற்றும் ஊர்வலங்களுக்கு மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

    விநாயகர் சிலை அமைக்க உத்தேசித்துள்ள அமைப்பாளர், சிலை வைக்கப்படும் இடத்திற்கு தடையில்லா சான்று பெற்று காவல் துறையின் உரிய அனுமதி பெற விண்ணப்பிக்க வேண்டும். ஒலிப்பெருக்கி மற்றும் அனுமதிக்காக தடையில்லா சான்று தொடர்புடைய காவல் ஆய்வாளரிடமிருந்து பெற வேண்டும். காவல் துறையால் தெரிவிக்கப்படும் விதிமுறைகளுக்குட்பட்டு ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்த வேண்டும். கூம்பு வடிவ ஒலிப்பெருக்கிகள் தடை செய்யப்பட்டுள்ளது. தற்காலிகக் கூடாரம் தீ பாதுகாப்பு தர நிலையை கடைபிடிப்பதாக உள்ளன என்பதற்கு தடையில்லா சான்று தீயணைப்பு துறையிடம் பெற வேண்டும். விநாயகர் சிலைகள் ஏற்கனவே வைக்கப்பட்ட இடங்களில் மட்டுமே நிறுவ வேண்டும். அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே பிரதிஷ்டை செய்ய வேண்டும்.

    எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்கள் கூடாரத்திலோ சிலை அமைக்கும் இடத்திலோ இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பந்தலுக்குள் எளிதாக செல்லும் வகையில் உள்ளே செல்ல மற்றும் வெளியே வர விசாலமான பாதைகள் அமைக்கப்பட வேண்டும். ஓலைப் பந்தல் அமைப்பதைத் தவிர்க்க வேண்டும். சிலையின் உயரம் அதன் பீடம் மற்றும் அடித்தளத்துடன் சேர்த்து 10 அடிக்கு மிகாமல் இருக்க வேண்டும். நான்கு சக்கர வாகனங்களான மினிலாரி போன்ற வாகனங்களில் மட்டுமே சிலைகளை கரைப்பதற்கு கொண்டு செல்ல பயன்படுத்த வேண்டும். ஊர்வலம், சிலையை கரைக்கும் இடத்தில் பட்டாசுகள் வெடிப்பது தடை செய்யப்படுகின்றது. விநாயகர் சிலைக்கு அணிவிக்கப்பட்ட பூ மற்றும் மாலைகள், துணிகள் அழகு சாதன பொருட்கள் கரைக்கப்படுவதற்கு முன்பு பிரிக்கப்பட வேண்டும். ஊர்வலம் செல்லும் பாதை காவல் துறையினர் வரையறுத்துக் கொடுத்த பாதை வழியாக மட்டுமே கொண்டு செல்லப்பட வேண்டும். சூரியன் மறைவதற்குள் அனைத்து சிலைகளும் கரைக்க வேண்டும். சிலை கரைப்பு நடைபெற்ற பகுதிகளில் கழிவுகள், குப்பைகள் அனைத்தும் உள்ளாட்சி மற்றும் பேரூராட்சி அமைப்பால் சுத்தம் செய்யப்பட வேண்டும். சிலை அமைப்பாளர்களால் உரிய இடத்தில் சிலை அமைக்கப்பட்டுள்ளதையும், விதிமீறல்கள் உள்ளதா? என்பதை உறுதி செய்யவும், ஊர்வலம் புறப்படும் இடத்திலிருந்து விஜர்சனம் செய்யும் இடங்களுக்கான வழித்தடங்களையும் முன்கூட்டியே காவல் துறையினர் தெரிவிக்கவும் வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×