கன்னியாகுமரி அருகே கடை ஊழியர் வீட்டில் கைவரிசை காட்டியது வடமாநில கொள்ளையர்களா?

கண்காணிப்பு காமிரா காட்சிகளை கைப்பற்றி விசாரணைதடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவான தடயங்களை பதிவு செய்தனர்.
கன்னியாகுமரி அருகே கடை ஊழியர் வீட்டில் கைவரிசை காட்டியது வடமாநில கொள்ளையர்களா?
Published on

கன்னியாகுமரி :

கன்னியாகுமரி அருகே உள்ள மகாதானபுரம் நான்கு வழி சாலை ரவுண் டானா சந்திப்பு பகுதியை சேர்ந்தவர் கோபி. கன்னியாகுமரியில் அழகு சாதன பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.

வியாபாரியான இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் திருப்பதி கோவிலுக்கு புறப்பட்டு சென்றார். இந்த நிலையில் நேற்று காலையில் இவரது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்துள்ளது. இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்துள்ளனர். இது பற்றி அந்த பகுதியில் உள்ள பொது மக்கள் கன்னியாகுமரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் கன்னியா குமரி டி.எஸ்.பி. மகேஷ் குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது அந்த பகுதியில் நோட்டமிட்ட யாரோ சில மர்ம நபர்கள் இந்த வீட்டில் ஆட்கள் இல்லாததை பயன்படுத்தி அவரது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளது தெரியவந்தது.

மேலும் அந்த வீட்டில் உள்ள அறையில் இருந்த பீரோவும் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது தெரிய வந்தது. அந்த பீரோவில் இருந்து 4 பவுன் நகை மற்றும் ரூ.48 ஆயிரம் ரொக்க பணம் போன்றவற்றை அந்த மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற தும் தெரியவந்துள்ளது. இந்த கொள்ளை நடந்த வீட்டில் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவான தடயங்களை பதிவு செய்தனர்.

மேலும் போலீஸ் துப்பறியும் நாயும் வரவழைக்கப்பட்டு மோப்பம் பிடிக்கப்பட்டது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிராக்களை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த கண்காணிப்பு காமிராவில் ஒரு சில நபர்களுடைய உருவங்கள் தெரிவதால் அவர்கள் வடமாநிலத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாமா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com