search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குழித்துறை அருகே மது போதையில் பாலத்தில் இருந்து பள்ளத்தில் விழுந்த குடிமகன்
    X

    குழித்துறை அருகே மது போதையில் பாலத்தில் இருந்து பள்ளத்தில் விழுந்த 'குடி'மகன்

    • தீயணைப்பு துறையினர் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்
    • ரெயில்வே மேம்பாலத்தின் மேல் பக்கவாட்டு சுவரில் அமர்வதும், தூங்குவதும் வழக்கம்.

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டம் குழித்துறையை அடுத்த கழுவன்திட்டை பகுதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு மாலை நேரத்தில் குடிமகன்களின் கூட்டம் அதிகமாக காணப்படும்.

    அங்கு மது குடிப்பவர்கள் அருகில் உள்ள ரெயில்வே மேம்பாலத்தின் மேல் பக்கவாட்டு சுவரில் அமர்வதும், தூங்குவதும் வழக்கம். நேற்று இரவு மது அருந்தி வந்த ஒருவர் மேம்பாலத்தின் மேல் பகுதியில் அமர்ந்துள்ளார்.

    அப்போது திடீரென நிலைதடுமாறி அவர் பள்ளத்தில் விழுந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியில் நின்ற ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்கள்அங்கு ஓடி வந்தனர். அவர்கள் பள்ளத்தில் விழுந்தவரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    ஆனால் பள்ளம் மிகவும் ஆழமான பகுதி என்பதாலும், அங்கு மின் விளக்கு வெளிச்சம் இல்லாததாலும் அவரை மீட்க முடியாத நிலை ஏற்பட்டது. இது குறித்து போலீசாருக்கும் குழித்துறை தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் பள்ளத்தில் விழுந்த நபரை கயிறு கட்டி மீட்டனர். பின்னர் அவரை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    இதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் குடிபோதையில் பள்ளத்தில் விழுந்தவர் அருமனை பகுதியை சேர்ந்த செல்வன் (வயது 43) என தெரிய வந்தது.

    தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடப்பதால் அப்பகுதியில் முள்வேலி அமைக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×