என் மலர்
உள்ளூர் செய்திகள்

கார்த்திகை மாத முதல் சோமவாரத்தை முன்னிட்டு குகநாதீஸ்வரருக்கு 13 வகை வாசனை
- திரவியங்களால் சிறப்பு அபிஷேகம்
- ஏற்பாடுகளை கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவில் பக்தர்கள் பேரவையினர் செய்து இருந்தனர்.
கன்னியாகுமரி :
கன்னியாகுமரி ரெயில் நிலைய சந்திப்பில் உள்ள குகநாதீஸ்வரர் கோவிலில் கார்த்திகை மாதம் முதல் திங்கட்கிழமையான நேற்று சோமவாரம் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி நேற்று அதிகாலை 6 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய பூஜையும், விஸ்வரூப தரிசனமும் நடந்தது.
அதைத்தொடர்ந்து அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. பின்னர் மூலவரான குகநாதீஸ்வரருக்கு நல்லெண்ணெய், மஞ்சள் பொடி, மாபொடி, களபம், பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், விபூதி, பன்னீர், சந்தனம் ஆகிய 13 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
அதன்பிறகு அலங்கார தீபாராதனை நடந்தது. பின்னர் மதியம் அன்னதானம் நடந்தது. மாலை சாயரட்சை தீபாராதனையும், இரவு ரிஷப வாகனத்தில் சுவாமியும், அம்பாளும் எழுந்தருளி கோவிலை சுற்றி வலம் வந்த நிகழ்ச்சி நடந்தது. அதைத்தொடர்ந்து பள்ளியறை நிகழ்ச்சி நடந்தது. பல்லக்கில் சுவாமியின் திருப்பாதமும் அம்பாளின் சக்கரமும் வைத்து கோவிலின் வெளிப்பிரகாரத்தை சுற்றி 3 முறை சங்கு ஒலிநாதம் மற்றும் மணி ஓசை முழங்க வலம்வர செய்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். பின்னர் பக்தர்களுக்கு அருட்பிரசாதம் வழங்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவில் பக்தர்கள் பேரவையினர் செய்து இருந்தனர்.






