திருவட்டார் நரசிம்மர் கோவிலில் உண்டியல் கொள்ளையர் 2 பேரின் கைரேகை சிக்கியது

போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகிறார்கள்.ஆலயத்தில் வைக்கபட்டிருந்த சி.சி.டி.வி. காட்சி பதிவு பெட்டியையும் கொள்ளையர்கள் தூக்கி சென்று விட்டனர்.
கோப்பு படம் 
கோப்பு படம் 
Published on

கன்னியாகுமரி:

குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலின் வளாகத்தில் நரசிம்மர் மடம் கோவில் அமைந்துள்ளது.

இங்கு நேற்று காலை அர்ச்ச கர் உண்ணிகிருஷ்ணன் ஷம்புநாத் வந்த போது, உண்டியல் உடைக்கப்ப ட்டிருப்பது தெரிய வந்தது. இது குறித்த புகாரின் பேரில் திருவட்டார் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

ஆலயத்தின் மடப்பள்ளியில் வைக்கப்பட்டிருந்த அரிசி பானையை திறந்து அதில் வைக்கபட்டிருந்த சாவிகளை எடுத்து 2 உண்டியல்களையும் திறந்து கொள்ளை சம்பவம் நடந்திருப்பது விசாரணையில் தெரியவந்தது. மேலும் ஆலயத்தில் வைக்கபட்டிருந்த சி.சி.டி.வி. காட்சி பதிவு பெட்டியையும் கொள்ளையர்கள் தூக்கி சென்று விட்டனர்.

தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார், கைரேகை நிபுணர்களை அழைத்து வந்து ஆய்வு செய்தனர். அப்போது உண்டியலின் மேற்பகுதியில் 2 பேரின் கைரேகை பதிந்த தடயம் கிடைத்தது. அதை வைத்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகிறார்கள். பழைய கொள்ளையர்களின் கைரேகை தடயங்களுடன் ஓப்பிட்டும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

கொள்ளையர்கள் கோவிலின் பின்பக்கம் வழியாக நடந்து சென்று பக்கத்தில் உள்ள ஆற்றின் கரையோரம் தான் சென்றிருப்பார்கள் என்று தெரிகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com