என் மலர்
உள்ளூர் செய்திகள்

கலைஞர் உரிமை தொகை: 1.31 லட்சம் மனுக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது
- விண்ணப்பப் பதிவு முகாமில் ஒரே நேரத்தில் பலர் கூட்டமாகக் கூடுவதை தவிர்க்க வேண்டும்.
- விண்ணப்பம் அளிக்கும் அனைத்து நபர்களின் விண்ணப்பங்களும் பதிவு செய்யப்படும்.
காவேரிப்பட்டணம்,
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டிணம் பேரூராட்சிக்குட்பட்ட வார்டு எண் 14, கோவிந்தப்பமுதலி தெரு, வார்டு எண் 7, பன்னீர் செல்வம் தெரு ஆகிய இடங்களில் உள்ள நியாயவிலைக் கடைகளில், நடைபெறும் முகாமில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணிகளை கலெக்டர் சரயு நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் கலெக்டர் கூறியதாவது:-
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ், மகளிர் உரிமைத்தொகை செப்டம்பர் 15 முதல் வழங்கப்படும் என முதல் அமைச்சர் அறிவித்து, அதற்கான விண்ணப்பங்கள் இணையதளத்தில் பதிவு செய்யும் முகாமை தர்மபுரி மாவட்டம், தொப்பூரில் கடந்த 24-ந் தேதி தொடங்கி வைத்தார்.
நமது மாவடடத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ், மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 பெறுவதற்கான விண்ணப்பங்கள் கடந்த 20-ந் தேதி முதல் ஒவ்வொரு நியாய விலைக் கடைப் பகுதியில் முகாம்கள் நடைபெறும் நாள் மற்றும் நேரம் ஆகியவற்றைக் குறிப்பிட்டு, ஒவ்வொரு குடும்பத்திற்கும் விண்ணப்பம், டோக்கன் ஆகியவை நியாயவிலைக் கடைப் பணியாளர்கள் மூலம் வீட்டில் நேரடியாக வழங்கப்பட்டது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவேற்றும் செய்யும் விண்ணப்ப பதிவு முகாம் கடந்த 24-ந் தேதி தொடங்கப்பட்டுள்ளது. முதல்கட்ட விண்ணப்பப் பதிவு முகாம் வருகிற 4-ந் தேதி வரையும், இரண்டாம் கட்ட முகாம் ஆகஸ்ட் 5 முதல் 16-ந் தேதி வரையும் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது.
விண்ணப்பம் பதிவு செய்யும் பொழுது சரிபார்ப்புக்காக ஆதார் அட்டை, குடும்ப அட்டை, மின் கட்டண ரசீது, வங்கி பாஸ் புத்தகம் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும். விண்ணப்பப் பதிவு முகாமில் ஒரே நேரத்தில் பலர் கூட்டமாகக் கூடுவதை தவிர்க்க வேண்டும். விண்ணப்பம் அளிக்கும் அனைத்து நபர்களின் விண்ணப்பங்களும் பதிவு செய்யப்படும்.
விண்ணப்ப பதிவு ஞாயிற்றுக்கிழமை உட்பட அனைத்து முகாம் நடைபெறும் நாட்களிலும், காலை 9.30 மணி முதல் 1 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் 5.30 மணி வரையும் நடைபெறுகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 24.07.2023 முதல் 26.07.2023 வரை 8 வட்டங்களில் உள்ள 584 நியாயவிலைக ்கடைகளுக்குட்பட்ட பகுதிகளில் 1 இலட்சத்து 31 ஆயிரத்து 404 மனுக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் கூறினார்.
இந்த ஆய்வின் போது, காவேரிப்பட்டிணம் பேரூராட்சி செயல் அலுவலர் சாம் கிங்ஸ்டன், கிருஷ்ணகிரி தாசில்தார் சம்பத், பேரூராட்சிகளின் உதவி செயற்பொறியாளர் சுப்ரமணி உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.






