search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கால்நடை உதவி மருத்துவர்களுக்கு புத்தாக்க பயிற்சி
    X

    கால்நடை உதவி மருத்துவர்களுக்கான புத்தாக்க பயிற்சி வகுப்பு தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. 

    கால்நடை உதவி மருத்துவர்களுக்கு புத்தாக்க பயிற்சி

    • கிராமப்புற ஏழை கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கு மருத்துவ சேவையை இலவசமாக வழங்கி கிராமிய பொருளாதாரத்தை பெருக்குவதில் கால்நடை பராமரிப்புத்துறை மிகச்சிறந்த பங்களிப்பை செய்து வருகிறது.
    • விலையில்லா வெள்ளாடுகள் மற்றும் விலையில்லா நாட்டு கோழிகள் கிராமப்புற ஏழை மகளிருக்கு வழங்குவதின் மூலம் அவர்களை தொழில் முனைவோராக மாற்றி வருகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புதிதாக பணியில் சேர்ந்த தஞ்சாவூர், திருவாரூர், நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த கால்நடை உதவி மருத்துவர்களுக்கான புத்தாக்க பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முன்னிலை வகித்தார்.

    கால்நடை பராமரிப்பு பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் தென்காசி சு.ஜவஹர் தலைமை தாங்கி பேசியதாவது:-

    தமிழக அரசு துறைகளில் கால்நடை பராமரிப்புத்துறை 130 ஆண்டுகள் பாராம்பரியம் கொண்ட மிகவும் தொன்மையான துறையாகும் .கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கு மருத்துவ சேவைகளை வழங்குவதில் இந்தியாவிலேயே முதன்மையான மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. 20 ஆவது கால்நடை கணக்கெடுப்பின் படி தமிழகத்தில் 1 கோடி பசுவினங்களும், 5 லட்சம் எருமையினங்களும், 1.43 கோடி செம்மறி மற்றும் வெள்ளாட்டினங்களும், 13 கோடி கோழியினங்களும் உள்ளன.

    கிராமப்புற ஏழை கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கு மருத்துவ சேவையை இலவசமாக வழங்கி கிராமிய பொருளாதாரத்தை பெருக்குவதில் கால்நடை பராமரிப்புத்துறை மிகச் சிறந்த பங்களிப்பைச் செய்து வருகிறது.தமிழக அரசு பல்வேறு சிறப்பு திட்டங்களான விலையில்லா வெள்ளா டுகள் மற்றும் விலையில்லா நாட்டுக் கோழிகள் கிராமப்புற ஏழை மகளிருக்கு வழங்குவதின் மூலம் அவர்களை தொழில் முனைவோராக மாற்றி கிராமப்புற வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், கிராமிய பொருளாதாரத்தை உயர்த்தவும் பெரும் பங்காற்றி வருகிறது.

    தமிழக வேளாண் மொத்த உற்பத்தியில் கால்நடை வளர்ப்பு சுமார் 41 சதவீதம் பங்களிப்பை வழங்குகிறது.தமிழக கால்நடை பராமரிப்புத்துறையில் தற்போது 3030 கால்நடை உதவி மருத்துவர் பணியிடங்கள் இந்த பணியிடங்களில் 1141 கால்நடை உதவி மருத்துவர் பணியிடங்கள் பல்வேறு நீதிமன்ற வழக்குகளால் கடந்த பத்தாண்டுகளாக நிரப்பபடாமல் இருந்த நிலையில் தமிழக முதல்வர் வழிகாட்டுதலாலும், கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் தொடர் முயற்சியிலும் அனைத்து சட்ட சிக்கல்களும் தீர்க்கப்பட்டு, நீதிமன்ற ஆணை பெறப்பட்டு, 1089 கால்நடை உதவி மருத்துவர்களுக்கு பணிநியமனம் வழங்கப்பட்டது.

    தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில், புதிதாக பணியில் சேர்ந்த கால்நடை உதவி மருத்துவர்களை வாக்கப்படுத்தி துறையின் செயல்பாடுகள் குறித்து வழிகாட்டுதல்கள் வழங்கும் புத்தாக்க பயிற்சி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களை சேர்ந்த 141 கால்நடை உதவி மருத்துவர்களுக்கு புத்தாக்க பயிற்சி நடைபெறுகிறது .இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி)ஸ்ரீகாந்த், கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் (கூ.பொ) ரவிச்சந்திரன், கூடுதல் இயக்குனர் (பண்ணை)இளங்கோவன் , மண்டல இணை இயக்குனர் (திருவாரூர்) ரமேஷ், மண்டல இணை இயக்குனர் நாகப்பட்டினம் சிரஞ்சீவி ராஜ், முதல்வர் கால்நடை மருத்துவ கல்லூரி முனைவர்நர்மதா, தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பேரவைத் தலைவர் சரவணன், மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் பொது மேலாளர் ரவி, துணைப் பதிவாளர் (பால்வளம்) விஜயலட்சுமி, முனைவர் ஜெகதீசன், உதவி இயக்குனர் சையதுஅழி, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் முருகன், புதிதாக பணியில் சேர்ந்த கால்நடை உதவி மருத்துவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×