search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எண்ணும் எழுத்தும் பிரசார வாகனம் தொடக்க விழா
    X

    பிரசார வாகனத்தை மாவட்ட கலெக்டர் சாந்தி தொடங்கி வைத்து பள்ளி மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்டார். 

    எண்ணும் எழுத்தும் பிரசார வாகனம் தொடக்க விழா

    • பள்ளி மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகளை அவர் பார்வையிட்டார்.
    • ஒரு பகுதியாக, எண்ணும் எழுத்தும் பிரசார வாகனம் தொடங்கப்பட்டு உள்ளது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டார வள மையம் அருகே ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் எண்ணும் எழுத்தும் பிரசார வாகனம் தொடக்க விழா நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் சாந்தி தலைமை தாங்கி பிரசார வாகனத்தை தொடங்கி வைத்தார். பின்னர் பள்ளி மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகளை அவர் பார்வையிட்டார்.

    அப்போது கலெக்டர் சாந்தி கூறியதாவது:- தமிழ்நாட்டில் குழந்தைகளிடையே ஏற்பட்ட கற்றல் இடைவெளிக்கு தீர்வு காண 2022-ம் ஆண்டு எண்ணும் எழுத்தும் திட்டம் தொடங்கப்பட்டது.

    இத்திட்டத்தின் தொலைநோக்கு பார்வையானது 2025-ம் ஆண்டுக்குள் அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவை 8 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளும் பெறவேண்டும் என்பதேயாகும். குழந்தைகள் பொருள் புரிந்து படிக்கும் திறனையும் அடிப்படை கணித செயல்பாடுகளை செய்யும் திறன்களையும் வளர்த்தெடுப்பதில் எண்ணும் எழுத்தும் திட்டம் ஒரு முக்கியப் பங்கை வகுக்கிறது.

    கற்றல் மற்றும் கற்பித்தலால் குழந்தைகளிடமும், ஆசிரியர்களிடமும் ஏற்பட்டுள்ள தாக்கத்தை மக்களிடமும் முக்கியமாக பெற்றோர்களிடமும் கொண்டுச் செல்ல "எண்ணும் எழுத்தும் கற்றலைக் கொண்டாடுவோம்" நிகழ்வு அனைத்து மாவட்டங்களிலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்த திட்டம் தொடங்கி ஓராண்டு நிறைவடைவதை முன்னிட்டு தர்மபுரி மாவட்டத்தில் எண்ணும் எழுத்தும் கற்றலை கொண்டாடுவோம் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

    இதன் ஒரு பகுதியாக, எண்ணும் எழுத்தும் பிரசார வாகனம் தொடங்கப்பட்டு உள்ளது. இந்த பிரசார வாகனம் அனைத்து வட்டார வள மையங்களுக்கும் செல்கிறது.

    எனவே இந்த எண்ணும் எழுத்தும் கற்றலை கொண்டாடும் பிரசார நிகழ்ச்சியில் பெற்றோர்கள், மாணவர்கள், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று பயன்பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு கலெக்டர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன், தொடக்கக்கல்வி மாவட்ட அலுவலர் மான்விழி, உதவி திட்ட அலுவலர் சம்பத்குமார் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×