என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மகள், மனைவி இறந்த சோகத்தில்  காதல் கணவரும் தற்கொலை
    X

    இறந்த கணவன்,மனைவியை படத்தில் காணலாம்.

    மகள், மனைவி இறந்த சோகத்தில் காதல் கணவரும் தற்கொலை

    • மகள், மனைவி இறந்த சோகத்தில் காதல் கணவர் தற்கொலை செய்து கொண்டார்.
    • உருக்கமான கடிதங்கள் சிக்கியது.

    இருதய பாதிப்பால் குழந்தை இறந்த நிலையில், தாய் தற்கொலை செய்து கொண்டார். மகள், மனைவி இறந்த சோகத்தில் காதல் கணவரும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன்பாக இளம்பெண்ணும், அவரது கணவரும் அடுத்தடுத்து எழுதி வைத்த உருக்கமான கடிதங்கள் சிக்கியது.

    இந்த சோக சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

    முகநூலில் மலர்ந்த காதல்

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகா அங்கம்பட்டி அருகே உள்ள குண்டுப்பட்டியை சேர்ந்தவர் ஜலபதி (வயது 25). லாரி டிரைவர். இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு மன்பு கன்னியாகுமரியில் உள்ள தனியார் கல் குவாரியில் லாரி ஓட்டி வந்தார்.

    அந்த நேரம் இவருக்கும், கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் தாலுகா தெங்கபட்டிணம் அருகே உள்ள கீழ் காட்டுவிளை கிராமத்தை சேர்ந்த சம்ரோபின்சன் என்பவரின் மகள் அபிசால்மியா என்ற பொறியியல் பட்டதாரி பெண்ணுடன் முகநூல் (பேஸ்புக்) மூலமாக நட்பு ஏற்பட்டது. பின்னர் அது காதலாக மலர்ந்தது. இவர்களின் காதலுக்கு பெண் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    திருமணம்

    இதையடுத்து வீட்டை விட்டு வெளியேறிய அபிசல்மியா, தனது காதலன் ஜலபதியை திருமணம் செய்து கொண்டு கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இருவரும் திருமண வயதை எட்டியவர்கள் என்பதால் அவர்கள் விருப்பப்படி சேர்ந்து வாழ போலீசார் அனுப்பி வைத்தனர்.

    கடந்த 2 ஆண்டுகளாக மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த அவர்களுக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் இருதய கோளாறால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வந்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி குழந்தை கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இறந்தது.

    இளம்பெண் தற்கொலை

    குழந்தை இறந்ததால் வேதனை அடைந்த அபிசல்மியா யாரிடமும் சரிவர பேசாமல் மவுனம் கர்தது வந்தார். தொடர்ந்து மன அழுத்தத்தில் இருந்த அவர் கடந்த 6-ந் தேதி இரவு தனது கணவரின் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும் தற்கொலைக்கு முன்பாக உருக்கமாக கடிதமும் எழுதி வைத்திருந்தார். இது குறித்து போச்சம்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். மேலும் திருமணமாகி 2 ஆண்டுகளில் இளம்பெண் இறந்துள்ளதால் இது குறித்து பர்கூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மனோகரனும் விசாரணை நடத்தி வந்தார்.

    கணவரும் தற்கொலை

    மேலும் தற்கொலை செய்து கொண்ட அபிசல்மியாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு பிறகு பெற்றோர் கன்னியாகுமரி வீட்டிற்கு எடுத்து சென்று அடக்கம் செய்தனர். குழந்தை இறந்த துக்கம் ஒருபுறம், ஆசை, ஆசையாய் காதலித்து திருமணம் செய்து கொண்ட மனைவி தற்கொலை ஒருபுறம் என வேதனையின் உச்சத்தில் இருந்த ஜலபதி, நேற்று முன்தினம் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும் தற்கொலை தொடர்பாக உருக்கமான கடிதமும் எழுதி வைத்திருந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் போச்சம்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஜலபதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக போச்சம்பள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போச்சம்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பெரும் சோகம்

    முகநூலில் பழகி பொறியியல் பட்டதாரி பெண்ணை காதலித்து திருமணம் செய்த லாரி டிரைவர், குழந்தை இறந்த வேதனையில் மனைவியும் தற்கொலை செய்ததால் தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் போச்சம்பள்ளி அருகே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இளம்பெண் எழுதிய உருக்கமான கடிதம்

    உடல் நலக்குறைவால் குழந்தை இறந்ததால் வேதனையில் அபிசல்மியா கடந்த 6-ந் தேதி இரவு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன்பாக அவர் எழுதிய உருக்கமான கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    என் சாவுக்கு யாருமே காரணமில்லை. முழுக்க முழுக்க நான் தான் காரணம். எல்லாருமே என்னை நல்லா தான் பார்த்துகிட்டாங்க. ஆனாலும் எனக்கு என் பாப்பாவ பார்க்கனும். அவ கூடவே இருக்கனும்னு தோனுது. என்ன மன்னிசிருங்க. என் சாம்பல என் ஊரு (கன்னியாகுமரி) கடல்ல கரைச்சிடுங்க. அது தான் என் கடைசி ஆசை. யாருமே எந்த விஷயத்திலயும் என்னை நினைக்க வேண்டாம். அப்படியே மறந்துடுங்க. எந்த சடங்கு, சம்பிரதாயமும் பண்ண வேண்டாம்.

    வந்தேன், போய்ட்டேன், அவ்வளவுதான். என் அண்ணன, அப்பாவ கடைசி வர பாக்காமலேயே போறேன் அது தான் ரொம்ப கஷ்டமா இருக்கு. அம்மா நீ பீல் பண்ணாத. அண்ணன் உன்ன நல்லா பார்த்துக்குவான். இப்படிக்கு அபிசல்மியா. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    கணவர் எழுதிய உருக்கமாக கடிதம்

    இருதய பாதிப்பால் குழந்தை இறந்த நிலையில், வேதனையில் அபிஷல்மியா தற்கொலை செய்து கொண்டார். குழந்தை, மனைவியை பறி கொடுத்த வேதனையில் தற்கொலை செய்து கொண்ட ஜலபதி தற்கொலைக்கு முன்பாக எழுதிய உருக்கமாக 4 பக்கத்தில் கடிதம் எழுதி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    என்னால் என் மனைவி அபியை பிரிந்து இருக்க முடியவில்லை. எனக்கு என்னுடைய அபி, பாப்பாவை பார்க்கனும் போல இருக்கு. அவள் எங்கு சென்றாலோ அங்கு நானும் செல்கிறேன். லவ் யூ ஷோ மச் அபி. என்னை எல்லோரும் மன்னித்து விடுங்க அப்பா பிளீஸ் பா. அபியை எங்கு அடக்கம் செய்தார்களோ அங்கு என்னையும் அடக்கம் செய்யுங்கள். இது தான் என்னுடைய கடைசி ஆசை.

    எனக்கு எந்த ஒரு சடங்கு செய்ய வேண்டாம். நீங்கள் பார்த்து பத்திரமாய் இருங்கள். செம்பா கண்ணுகுட்டியை நன்றாக பார்த்து கொள்ளுங்கள். சங்கி நீ நன்றாக இருப்பாய். என்னுடைய அப்பா அம்மா மாதிரி இந்த உலகில் யாருக்கும் அமையாது. என்னுடைய அபி எனக்கு சாமி ஷோ நான் என்னுடைய சாமியிடம் செல்கிறேன்.

    அபி இல்லாத உலகம் எனக்கு வேண்டாம். இது என்னுடைய சுயமான முடிவு. அம்மா உன்னிடம் ஒரு பொய் சொல்லிட்டேன். நைட் அபி என்னை கூப்பிட்டா. நீயும் வா நான் பாப்பாவிடம் தான் இருக்கிறேன் என்று. எங்களுக்கு பயமாக இருக்கு என்று.

    எனக்கு இறப்பதற்கு பயமாய் தான் இருக்கு. அவள் இல்லாத உலகில் எனக்கு மட்டும் என்ன வேலை அதனால் தான் இந்த முடிவு. லவ் அண்டு லவ் ஒன்லி. அபிசல்மியா, ஜலபதி, பிரணிதா. திஸ் லவ் ஸ்டோரி என்ட் டுடே. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×