என் மலர்
உள்ளூர் செய்திகள்

சேலத்தில் சொத்தை பல்லை பிடுங்கிய7 வயது சிறுமி திடீர் சாவு
- கீர்த்தனா (7). இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தார்.
- கீர்த்தனாவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனால் அவரை வேறு ஒரு தனியார் மருத்துவ மனையில் சேர்த்துள்ளனர்.
சேலம்:
சேலம் டவுன் தாதுபாய் குட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தபாபு (வயது 32). இவரது மகள் கீர்த்தனா (7). இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 23-ந் தேதி, சேலத்தில் உள்ள ஒரு தனியார் பல் மருத்துவமனையில் கீர்த்தனாவுக்கு சொத்தை பல்லை அகற்றி உள்ளனர். அப்போது கீர்த்தனாவிற்கு அதிகப்படியான ரத்தம் வெளியேறியதாக கூறப்படுகிறது.
உடல்நிலை மோசமடைந்தது
அதன் பின்னர் கீர்த்தனாவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனால் அவரை வேறு ஒரு தனியார் மருத்துவ மனையில் சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று கீர்த்தனாவின் உடல்நிலை மோசமடைந்தது.
இதையடுத்து அவரை சேலம் அரசு மருத்துவ மனையில் கொண்டு வந்து சேர்த்தனர். அங்கு கீர்த்தனா நேற்று மாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து சேலம் டவுன் போசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பல் பிடுங்கியதால் உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிறுமி இறந்த சம்பவம் அந்த பகுதியில் உள்ளவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.






