என் மலர்
உள்ளூர் செய்திகள்

பரமத்திவேலூர் பகுதியில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பூக்களின் விலை கிடுகிடு உயர்வு
- பரமத்திவேலூர் மற்றும் கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்வேறு வகையான பூக்கள் பயிர் செய்யப்பட்டுள்ளது.
- திருவிழாக்கள் மற்றும் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு பூக்கள் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் மற்றும் கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்வேறு வகையான பூக்கள் பயிர் செய்யப்பட்டுள்ளது.
இங்கு விளையும் பூக்களை, விவசாயிகள் பரமத்திவேலூரில் உள்ள ஏல சந்தைகளுக்கு கொண்டு வருகின்றனர். வேலூர், ஜேடர்பாளையம், கபிலர்மலை, பரமத்தி, பாலப்பட்டி மற்றும் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள், பூக்களை ஏலம் எடுக்க வருகின்றனர்.
கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் குண்டுமல்லிகை கிலோ ரூ.400-க்கும், சம்பங்கி ரூ.150-க்கும், அரளி ரூ.100-க்கும், ரோஜா ரூ.160-க்கும், முல்லைப் பூ ரூ.500-க்கும், செவ்வந்திப்பூ ரூ.180-க்கும், கனகாம்பரம் ரூ.400-க்கும், காக்கரட்டான் ரூ.400-க்கும் ஏலம் போனது.
இந்த நிலையில் நேற்று நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லிகை கிலோ ரூ.700-க்கும், சம்பங்கி ரூ.240-க்கும், அரளி ரூ.180-க்கும், ரோஜா ரூ.240-க்கும், முல்லைப் பூ ரூ.800-க்கும், செவ்வந்திப்பூ ரூ.260-க்கும், கனகாம்பரம் ரூ.600-க்கும், காக்கரட்டான் ரூ.700-க்கும் ஏலம் போனது.
பரமத்திவேலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கோவில்களில் திருவிழாக்கள் மற்றும் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு பூக்கள் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்த னர். விலை உயர்ந்துள்ளதால், பூக்கள் பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.






