என் மலர்
உள்ளூர் செய்திகள்

கொப்பரை தேங்காய் கொள்முதல் திட்டத்தில்தென்னை விவசாயிகள் பயன் பெறலாம்
- பந்து கொப்பரை தேங்காய் ஒரு கிலோ ரூ-110க்கும், ஆறு மாத காலத்திற்கு கொள்முதல் செய்யப்பட உள்ளது.
- போச்சம்பள்ளி ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் செயல்படுகிறது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கொப்பரை தேங்காய் கொள்முதல் திட்டத்தில் தென்னை விவசாயிகள் அதிக அளவில் கலந்துகொண்டு பயன்பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
விவசாயிகளின் விளைப்பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கவும், அவர்களின் வருவாயை பெருக்கவும் தமிழக அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. தென்னை சாகுபடி செய்த விவசாயிகள் பயன்பெறும் வகையில், அவர்கள் விளைவித்த கொப்பரை தேங்காய் விளைபொருளை ஒன்றிய அரசின் நாபெட் நிறுவனம் மூலம் கொள்முதல் செய்யப்படவுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு கொள்முதல் இலக்காக 1800 மெட்ரிக் டன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தற்போது தேங்காய்ப் பருப்பு விலை ஒரு கிலோ ரூ.73.19 முதல் ரூ.90.99 வரை உள்ளூர் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. தமிழக அரசு விவசாயிகளின் நலன் கருதி, நிர்ணயிக்கப்பட்ட தரத்திற்கு மத்திய அரசின் குறைந்தபட்ச ஆதரவு விலையில் அரவைப் கொப்பரை தேங்காய் விலை ஒரு கிலோ ரூ.105.90க்கும், பந்து கொப்பரை தேங்காய் ஒரு கிலோ ரூ-110க்கும், ஆறு மாத காலத்திற்கு கொள்முதல் செய்யப்பட உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இத்திட்டம் கிருஷ்ணகிரி மற்றும் போச்சம்பள்ளி ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் செயல்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் பயன்பெறும் விவசாயிகள் நிலத்தின் சிட்டா அடங்கல், ஆதார் அட்டை நகல் மற்றும் வங்கிக்கணக்கு புத்தக நகல் ஆகிய விவரங்களுடன் கிருஷ்ணகிரி மற்றும் போச்சம்பள்ளி ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களின் கண்காணிப்பாளர்களை அணுகி பதிவு செய்து கொள்ளலாம்.
தேங்காய் கொப்பரை கொள்முதல் வருகிற ஜூலை மாதம் 31&ந் தேதி வரையிலான காலம் வரை நடைபெறவுள்ளது. தேங்காய் கொப்பரை விளைபொருளுக்கு உரிய தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.
தமிழ்நாடு அரசு தென்னை விவசாயிகளின் நலனிற்காக மேற்கொண்டுள்ள இந்த கொள்முதல் திட்டத்தில் மாவட்டத்தில் உள்ள தென்னை விவசாயிகள் அதிக அளவில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






