search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தருமபுரியில்  தக்காளி விலை கடும் சரிவு
    X

    தருமபுரியில் தக்காளி விலை கடும் சரிவு

    • தக்காளி பழங்களை சேமித்து வைத்தால் பொதுமக்களும் பாதிப்படையாமல் சராசரி விலைக்கு பழங்களை வாங்கி செல்லலாம்.
    • தக்காளியின் விலை படு வீழ்ச்சி அடைந்து 2 ரூபாய் முதல் 5 ரூபாய் வரை மொத்த வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர்.

    தருமபுரி,

    பொதுமக்களின் உணவுகளில் முக்கிய பங்கு வகிப்பது தக்காளியாகும், அனைத்து மாநில மக்களின் இல்லத்தரசிகளின் உணவு தயாரிப்பில் முக்கிய உணவு பொருளாக இருந்து வருகிறது.

    தக்காளி சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், வயதாவதையும் தாமதப் படுத்துகிறது. சருமத்தின் வைட்டமின் குறைவினால் ஏற்படும் சுருக்கம், அதோடு மிகவும் வெயிலில் அலைவதால் ஏற்படும் சருமப் பிரச்சனைகளையும் தக்காளி தீர்க்கிறது. தக்காளிப் பழங்கள் வலுவான எலும்புகளையும் பற்களை பெறுவதற்கும் உதவுகின்றன.

    இத்தனை சிறப்பு வாய்ந்த தக்காளி தருமபுரி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். அதேபோல் வெளி மாநிலங்களிலும் சாகுபடி செய்யப்படுகிறது. சில சமயங்களில் தமிழகத்தில் தக்காளி தட்டுப்பாடு வரும்போது மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் தக்காளி பழம் இறக்குமதி செய்யப்படுகிறது.

    அதிகமாக வெப்பத்தின் காரணமாகவும், அதிகப்படியான மழையின் காரணமாகவும் தக்காளி விளைச்சல் பெரிதும் பாதிக்கப்படுவதால் அந்த சமயங்களில் தக்காளியின் விலை கிலோ 50 முதல் 120 வரை விலை உச்சத்தை எட்டுகிறது.

    அந்த சமயங்களில் இல்லத்தரசிகளின் வேதனையான புலம்பல் கண்களில் கண்ணீரை வரவழைக்கின்றது.

    இது குறித்து விவசாயிகள் கூறும்போது:-

    அதிகமாக தேவைப்படுவதால் பெரும்பாலும் விவசாயிகள் தக்காளியை சாகுபடி செய்து வருகின்றனர்.

    சராசரியாக மிதமான பருவ காலங்களில் தக்காளியின் விளைச்சல் அமோகமாக இருக்கும். அந்த காலங்களில் தக்காளியின் விலை படு வீழ்ச்சி அடைந்து 2 ரூபாய் முதல் 5 ரூபாய் வரை மொத்த வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர்.

    இதனால் விவசாயிகளுக்கு தக்காளி பழ அறுவடை கூலி கொடுக்க முடியாமல் பழங்களை செடிகளிலேயே பறிக்காமல் விடும் சூழ்நிலை உள்ளது. சில சமயங்களில் ஆடு,மாடுகளை மேய்ச்சலுக்கு அவலமும் நடக்கிறது.

    இது போன்ற சமயங்களில் தமிழக அரசு தருமபுரி மாவட்டத்தில் தாலுகாவிற்கு ஒரு மதிப்பு கூட்டும் ஆலையை அமைத்து கொடுத்தால் அந்தந்த தாலுகாவில் உள்ள விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் தக்காளி பழங்களை மதிப்பு கூட்டும் ஆலைகளுக்கு கொடுக்கும்போது தங்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்வார்கள்.

    மேலும் கோடைக்கு முன்பும், பருவ மழைக்கு முன்பும் சேமிப்பு கிடங்குகளில் முன்கூட்டியே தக்காளி பழங்களை சேமித்து வைத்தால் பொதுமக்களும் பாதிப்படையாமல் சராசரி விலைக்கு பழங்களை வாங்கி செல்லலாம்.

    விளைச்சல் அதிகரிக்கும் சமயங்களில் தக்காளி பழங்களை குளிரூட்டும் சேமிப்பு கிடங்குகளில் வேளாண்மை துறையினரின் கட்டுபாட்டில் சேமித்து வைக்க தொடங்கினால் வரும் வடமேற்கு பருவமழை காலங்களில் தக்காளியின் விலையை சமாளிக்கலாம்.

    மேலும் இது போன்ற சமயங்களில் அரசு கொள்முதல் செய்யும் பொழுது விவசாயிகளும் பாதிப்படையாமல் தங்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்வதற்கு ஏதுவாக இருக்கும்.

    இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×