என் மலர்
உள்ளூர் செய்திகள்

குருநாதசாமி கோவில் விழா: கடை வியாபாரிகள் திடீர் சாலை மறியல்- நாளை வரை நடத்த அனுமதிக்க வலியுறுத்தல்
- கடைகள் வைத்திருந்தவர்கள் திடீரென சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
- புதுப்பாளையம் பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பரபரப்பு நிலவியது.
அந்தியூர்:
அந்தியூர் அடுத்த புதுப்பாளையத்தில் புகழ்பெற்ற குருநாதசாமி கோவில் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த சனிக்கிழமையுடன் விழா நிறைவடைந்தது.
ஆனால் அடுத்த நாள் ஞாயிற்று க்கிழமை விடுமுறை என்பதால் அன்று கட்டுக்கடங்காத கூட்டம் அதிக அளவில் இருந்தது. மேலும் நேற்று திங்கட்கிழமையும் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.
இந்த நிலையில் நேற்று மாலை அந்தியூர் குருநாத சாமி கோவில் வளாகத்தில் போலீசார் கடைகளுக்கு பாதுகாப்பு வழங்க முடியாது கடைகளை அடைக்குமாறு கூறியதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து அந்த பகுதியில் கடைகள் வைத்திருந்தவர்கள் திடீரென சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பும், போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.
இது பற்றி தகவல் கிடைத்ததும் அந்தியூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் சப்- இன்ஸ்பெக்டர் கார்த்தி மற்றும் அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்தனர். இதை தொடர்ந்து அவர்கள் கடை நடத்துபவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
இதில் கடந்த 2 நாட்களாக மழையின் காரணமாக எதிர்பார்த்த அளவு வியாபாரம் இல்லை. குறைந்து காணப்பட்டது. நாளை (புதன்கிழமை) பால் பூஜை நடக்கிறது. எனவே நாளை வரை கடை நடத்த எங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும். சுதந்திர தின விடுமுறையையொட்டி எதிர்பார்த்த கூட்டம் வருவதற்கு வாய்ப்பு இருப்பதால் நாளை வரை அனுமதி வழங்க வேண்டும் என்று வியாபாரிகள் ஏ.ஜி. வெங்கடாசலம் எம்.எல்.ஏ.யிடம் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து எம்.எல்.ஏ. அதிகாரிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். இதை தொடர்ந்து துறை சார்ந்த அதிகாரிகளிடத்தில் அனுமதி பெற்று புதன்கிழமை வரை கடை நடத்த அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து வியாபாரிகள் அனைவரும் மறியலை கைவிட்டு அங்கு இருந்து கலந்து சென்றனர். இதனால் புதுப்பாளையம் பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பரபரப்பு நிலவியது.






