என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    19-ந் தேதி குரூப்-1 போட்டித் தேர்வு:  கிருஷ்ணகிரி மாவட்டத்தில்   19 மையங்களில் 5,512 பேர் எழுதுகிறார்கள்
    X

    கிருஷ்ணகிரியில் குரூப்-1 தேர்வு நடைபெறுவதை முன்னிட்டு முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தலைமையில் நடைபெற்ற போது எடுத்த படம்.

    19-ந் தேதி குரூப்-1 போட்டித் தேர்வு: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 19 மையங்களில் 5,512 பேர் எழுதுகிறார்கள்

    • ஆலோசனை கூட்டம் கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தலைமையில் நேற்று நடந்தது.
    • கொரோனா நோய்த்தடுப்பு நடவடிக்கை மற்றும் நடமாடும் மருத்துவக்குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-1 போட்டித் தேர்வு நடைபெறுவதையொட்டி, முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தலைமையில் நேற்று நடந்தது.

    கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வருகிற 19-ந் தேதி (சனிக்கிழமை) அன்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் குரூப்-1 தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வு 19 தேர்வு கூடங்களில் 5,512 நபர்கள் தேர்வு எழுத உள்ளனர். இத்தேர்வை கண்காணிக்க 19 முதன்மை கண்காணிப்பாளர்களும், 2 பறக்கும்படையும், 6 நடமாடும் அலகு, 19 ஆய்வு அலுவலர்கள், 20 வீடியோ கிராபர்கள், 6 ஆயுதம் ஏந்திய காவலர்கள், 19 தேர்வு கூட காவலர்கள் என மொத்தம் 91 நபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    தாசில்தார்கள் மூலம் தேர்வு மையங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், தளவாடங்கள் இல்லை எனும் பட்சத்தில் மாற்று ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் வழித்தட வரைபடமும், கிருஷ்ணகிரி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளர் சார்பில் 19 தேர்வு கூடங்களுக்கு தேர்வாளர்கள் செல்ல ஏதுவாக பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது.

    மேலும் தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பாக தேர்வு நாளன்று தடையில்லா மின்சாரம் வழங்கவும், தீயணைப்புத்துறை சார்பாக பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டள்ளன. இதைத் தவிர நகராட்சி ஆணையாளர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் மூலம் தேர்வு நாளன்று குடிநீர் வசதி மற்றும் சுகாதார வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் நலப்பணிகள் இணை இயக்குனர் சார்பாக கொரோனா நோய்த்தடுப்பு நடவடிக்கை மற்றும் நடமாடும் மருத்துவக்குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வேடியப்பன், கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் சதீஸ்குமார், கிருஷ்ணகிரி துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழரசி, போக்குவரத்து துறை, கல்வித்துறை, தீயணைப்புத்துறை, பேரூராட்சிகள் துறை, தமிழ்நாடு மின்சார வாரியம், கருவூலத்துறை மற்றும் சுகாதாரத்துறை உள்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×