என் மலர்
உள்ளூர் செய்திகள்

காட்டெருமை முட்டியதில் பலியான ஆடுகள்.
கொடைக்கானலில் காட்டெருமை தாக்கி ஆடுகள் பலி
- அதிகாலை நேரத்தில் வந்த காட்டெருமை 3 ஆடுகளை முட்டி தாக்கியது.
- குடல் சரிந்து படுகாயமடைந்த ஆடுகள் இறந்தன.
கொடைக்கானல்:
கொடைக்கானல் நகர் பகுதிகளில் அவ்வப்போது வனவிலங்குகள் வருவது வழக்கம்.இதில் காட்டெருமைகள் தெருப்பகுதிகளில் சர்வசாதாரணமாக நடைபோடும்.பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் காட்டெருமைகள் நடமாட்டம் இருக்கும்.
இவற்றை கட்டுப்படுத்த வனத்துறை சார்பில் தற்போது களப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டு அவ்வப்போது நகர் பகுதிக்குள் புகும் காட்டெருமைகளை பொது மக்களுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் இடையூறு ஏற்படாத வகையில் பாதுகாப்பாக வனப்பகுதிக்குள் விரட்டி வருகின்றனர்.இந்நிலையில் நாயுடுபுரம் பகுதியில் இறைச்சி நடத்தி வரும் முருகன் என்பவர் தனது ஆடுகளை அவரது கடைக்கு எதிர்ப்புறம் உள்ள புல்வெளியில் கட்டி வைத்துள்ளார்.
இன்று அதிகாலை அந்த வழியாக வந்த காட்டெருமை 3 ஆடுகளை முட்டி தாக்கியது. இதில் 3 ஆடுகளும் உயிரிழந்துள்ளது. சம்பவம் குறித்து அறிந்த வனத்துறையினர் அப்பகுதிக்குச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
உடற்கூறு ஆய்வு செய்த பின்பு காட்டெருமை தான் தாக்கியது என்று உறுதிப்படுத்தப்பட்டால் உரிய இழப்பீடு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். 3 ஆடுகள் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.






