search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலைகள் வழியாக எரிவாயு குழாய்களை பதிக்க வேண்டும்
    X

    எரிவாயு குழாய்களை பதிக்க எதிர்ப்பு தெரிவித்து திரண்ட மக்களை படத்தில் காணலாம்.

    சாலைகள் வழியாக எரிவாயு குழாய்களை பதிக்க வேண்டும்

    • காலி நிலங்கள் மற்றும் சாலைகள் வழியாக எரிவாயு குழாய்களை பதிக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்
    • மாவட்ட நிர்வாகம் குடியிருப்பு பகுதியில் எரிவாயு குழாய்களை பதிக்க அனுமதிக்க கூடாது

    ஓசூர்,

    கேரள மாநிலத்தில் இருந்து தமிழகம் வழியாக கர்நாடக மாநிலத்திற்கு கெயில் நிறுவனம் குழாய்கள் மூலம் எரிவாயு கொண்டு செல்லவுள்ளது.

    இதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கெயில் நிறுவனம் எரிவாயு குழாய்களை பதிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே ராயக்கோட்டை, கெலமங்கலம் உள்ளிட்ட பகுதிகளிலும் இந்த எரிவாயு குழாய்கள் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கு அப்பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

    இந்த நிலையில், ஓசூர் அருகேயுள்ள நாகொண்டபள்ளி ஊராட்சிக்குட்பட்ட வெங்கடேஸ்வரா நகர் பகுதியில் குடியிருப்பு பகுதிக்கு நடுவே எரிவாயு குழாய்களை பதிக்க கெயில் நிறுவனம் பல இடங்களில் குழாய்களை இறக்கியுள்ளது.

    இதனைப்பார்த்து, அந்த பகுதி பொதுமக்கள் அச்சமடைந்தனர். குடியிருப்பு பகுதிகளுக்கு மத்தியில் வீடுகளுக்கு அருகே எரிவாயு குழாய்களை பதித்து சென்றால் பொதுமக்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் ஏற்படும் எனக்கூறி எரிவாயு குழாய்கள் பதிக்கும் பணிகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    தங்கள் குடியிருப்புக்கு நடுவே எரிவாயு குழாய்களை அமைக்க கூடாது என்றும், அந்த பணிகளை உடனடியாகதடுத்து நிறுத்த வேண்டும் எனக்கூறி அப்பகுதி பொதுமக்கள் ஒசூர் உதவி கலெக்டர், தாசில்தார் உள்ளிட்ட வருவாய் துறை அதிகாரிகளிடம் மனு அளித்தனர்.

    மாவட்ட நிர்வாகம் இதில் உடனடியாக தலையிட்டு இந்த பணிகளை நிறுத்தி, குடியிருப்பு பகுதிக்கு அருகே உள்ள காலி நிலங்கள் மற்றும் சாலைகள் வழியாக எரிவாயு குழாய்களை பதிக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மாவட்ட நிர்வாகம் குடியிருப்பு பகுதியில் எரிவாயு குழாய்களை பதிக்க அனுமதிக்க கூடாது. இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க விட்டால் குடியிருப்பில் வாழும் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×