என் மலர்
உள்ளூர் செய்திகள்

கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி கிருஷ்ணகிரியில் இலவச மருத்துவ முகாம்
- அஞ்செட்டி போன்ற மலை கிராம மக்கள் மற்றும் பழங்குடியின மக்களையும் இந்த முகாமில் பங்கேற்க செய்ய வேண்டும்.
- இதற்கான அனைத்து அடிப்படை வசதிகளையும் உரிய துறை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும்
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை சிறப்பிக்கும் வகையில் இலவச பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுவதையொட்டி கலெக்டர் சரயு தலைமையில் காணொளி காட்சி வாயிலாக துறை சார்ந்த அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில் பல்வேறு துறைகள் சார்பாக அரசு நலத்திட்ட உதவிகள் மற்றும் மரக்கன்றுகள் நடும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக இலவச பன்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளை (சனிக்கிழமை) 4 இடங்களில் நடைபெற உள்ளது.
அதன்படி மத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பர்கூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, ஓசூர் காமராஜ் காலனி அரசு தொடக்கப்பள்ளி மற்றும் அஞ்செட்டி அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய 4 இடங்களில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
இதில், தொற்றா நோய்களுக்கான ரத்த அழுத்த பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை, பெண்களுக்கான மார்பக மற்றும் கர்ப்பபை வாய் புற்றுநோய் சிகிச்சை, பொது மருத்துவம், இசிஜி மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான பரிசோதனை, கண் பரிசோதனை, காது, மூக்கு, தொண்டை பரிசோதனை, பல் மருத்துவம், எலும்பியல் மருத்துவம், மனநல மருத்துவம் போன்ற சிகிச்சைகள் சிறப்பு மருத்துவர்களால் அளிக்கப்பட உள்ளது.
மேலும் சித்தா மருத்துவம், ஆயுர் வேத மருத்துவ சிகிச்சை வழங்கப்படவுள்ளது. இம்முகாமில் பங்கேற்று மேல் சிகிசசை தேவைப்படுவோர்க்கு முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சை வழங்கப்படும். காப்பீட்டு திட்ட அட்டை இல்லாதவர்களுக்கு இந்த சிறப்பு மருத்துவ முகாமில் காப்பீடு அட்டை வழங்கப்படும். குறிப்பாக தூய்மை பணியாளர்களை அனைவருக்கும் இந்த மருத்துவ முகாமில் பங்கேற்க செய்து அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட வேண்டும்.
மாவட்டத்தில் தேன்கனிக்கோட்டை தாலுகா அஞ்செட்டி போன்ற மலை கிராம மக்கள் மற்றும் பழங்குடியின மக்களையும் இந்த முகாமில் பங்கேற்க செய்ய வேண்டும். இதற்கான அனைத்து அடிப்படை வசதிகளையும் உரிய துறை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் வேடியப்பன், நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர்.பரமசிவன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் டாக்டர்.ரமேஷ்குமார், முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட அலுவலர் சையதுஅலி மற்றும் காணொளி காட்சி வாயிலாக ஓசூர் உதவி கலெக்டர் சரண்யா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.






