search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வனக்குற்றங்களைத் தடுக்க சோதனை சாவடியில் மோப்ப நாய் மூலம் வனத்துறையினர் சோதனை
    X

    வனக்குற்றங்களைத் தடுக்க சோதனை சாவடியில் மோப்ப நாய் மூலம் வனத்துறையினர் சோதனை

    • கண்காணிக்கப்பட்டு வந்தாலும், இதுபோன்ற குற்றச் சம்பவங்களை அதிக அளவில் தடுக்க முடிவதில்லை.
    • காவல்துறையில் மோப்ப நாய்களை பயன்படுத்துவது போன்று, ஓசூர் வனக்கோட்டத்திலும் மோப்ப நாய் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வனக்கோட்டத்தில் காவிரி வடக்கு வன உயிரின சரணாலயத்தின் பரப்பளவு 504.33 ச.கி.மீ மற்றும் காவிரி தெற்கு வன உயிரின சரணாலயத்தின் பரப்பளவு 686.40 ச.கி.மீ என மொத்த பரபரப்பு 1501 சதுர கி.மீ உள்ளது.

    இங்கு 468 வகையான தாவர இனங்களும், 36 வகையான பாலூட்டிகளும், 272 வகையான பறவை இனங்களும், 172 வகையான வண்ணத்து பூச்சிகளும் காணப்படுகின்றன. அதிக எண்ணிக்கையில் யானைகள், காட்டெருமைகள், மான்கள், கரடிகள், எறும்பு திண்ணிகள், சிறுத்தைகள் மற்றும் மயில்கள் போன்ற வன உயிரினங்களும், அரியவகை விலங்குகளான சாம்பல்நிற அணில்கள், எகிப்திய கழுகுகள் போன்றவையும் காணப்படுகின்றன. அதேபோல் சந்தனம் மற்றும் செம்மரங்கள் உள்ளிட்ட விலை உயர்ந்த மரங்களும் உள்ளன.

    இந்த வனப்பகுதிகள் கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலத்துடன் இணைந்துள்ளன. இதனால் வனப்பகுதியில் வனவிலங்குகள் வேட்டையாடுதல், மரங்களை வெட்டி வெளி மாநிலங்களுக்குக் கடத்துவது என பல்வேறு சமூக விரோதச் செயல்கள் நடக்கின்றன.

    இதனைத் தடுக்க வனப்பகுதிகளிலும், மாநில எல்லைகளிலும் சோதனை சாவடிகள் அமைக்கபட்டு வனத்துறையினரால் கண்காணிக்கப்பட்டு வந்தாலும், இதுபோன்ற குற்றச் சம்பவங்களை அதிக அளவில் தடுக்க முடிவதில்லை.

    இதன் காரணமாக, காவல்துறையில் மோப்ப நாய்களை பயன்படுத்துவது போன்று, ஓசூர் வனக்கோட்டத்திலும் மோப்ப நாய் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு வார காலமாக ஓசூர் மாநில எல்லை பகுதிகளில் வாகனங்களைச் சோதனை செய்வதில் மோப்ப நாய் ஈடுப்படுத்தப்பட்டு வருகிறது.

    இது குறித்து ஓசூர் வனசரகர் ரவி கூறும் போது, கொலை, திருட்டு போன்ற குற்ற சம்பவங்களில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க காவல்துறை சார்பில் மோப்ப நாய் பயன்படுத்துவது போன்று, வனத்துறை சார்பிலும் கடத்தல் மற்றும் வனவிலங்குகளை வேட்டையடுவதை தடுக்கவும் மோப்ப நாயை பயன்படுத்த தேனியில் உள்ள வனத்துறை கல்லூரியில் ஜெர்மன் ஷெப்பர்ட் ரக நாய்களுக்கு கடந்த 6 மாங்களாக பயிற்சியளிக்கப்பட்டு வந்தது.

    பயிற்சி பெற்ற மோப்ப நாய் ஓசூர் வனக்கோட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. அந்த நாய்க்கு பாரி என பெயர் சூட்டப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாக அந்த நாயை வைத்து தமிழகத்திலிருந்து கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலத்திற்கு சந்தன மரங்கள் மற்றும் செம்மரங்கள், உடும்பு, மான்கறி, யானை தந்தம் போன்ற வனபொருட்கள் ஏதாவது எடுத்துச் செல்லப்படுகின்றனவா என ஜூஜூவாடி, பேரிகை, அந்திவாடி போன்ற மாநில எல்லைகளில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறோம்.

    இதனைத் தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் சொகுசு பேருந்துகள் மூலம் கடத்தல் சம்பவங்கள் நடப்பதைத் தடுக்கவும் மோப்ப நாயைப் பயன்படுத்த உள்ளோம். மேலும், நாட்டு துப்பாக்கி, கள்ளத் துப்பாக்கி, வெடிபொருட்கள் போன்றவை பதுக்கப்படுவதை கண்டுபிடிக்கவும், பாரியை பயன்படுத்த உள்ளோம். இதன் மூலம் வனப்பகுதியில் நடக்கும் சமூகவிரோத செயல்களை பெரிய அளவில் தடுக்க முடியும் என்றார்.

    Next Story
    ×