என் மலர்
உள்ளூர் செய்திகள்

எருது விடும் விழாக்களுக்கு 3 நாட்களுக்கு முன் ஏற்பாடுகளை முடிக்க வேண்டும்
- நாள் குறிப்பிட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
- தேசிய நெடுஞ்சாலை அருகே எருதுவிடும் விழாவுக்கு அனுமதியில்லை.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், எருது விடும் விழா குறித்த ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு இந்திய விலங்குகள் நல வாரிய உறுப்பினர் எஸ்.கே.மிட்டல் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில், விலங்குகள் நல வாரிய உறுப்பினர் எஸ்.கே.மிட்டல் பேசியதாவது;-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எருது விடும் விழா நடத்த சம்பந்தப்பட்ட விழாக்குழுவினர்கள் ஒரு மாதத்திற்கு முன்னதாகவே இடம், நாள் குறிப்பிட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். காளைகளுக்கான உடற்தகுதி சான்று, எருது விடும் விழா நிகழ்ச்சிகளில் ஒரு காளையுடன் உரிமையாளர், ஒரு உதவியாளர் பங்கேற்பது உள்ளிட்ட விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்.
மாற்று நபர்களுக்கு அனுமதி கிடையாது. எருது விடும் விழாவில் பங்கேற்கும் காளைகளின் பதிவு, நிகழ்ச்சி ஏற்பாடுகள் 3 நாட்களுக்கு முன்பே முடிக்க வேண்டும். தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள மற்ற அனைத்து விதிமுறைகளையும் முறையாக பின்பற்ற வேண்டும். தேசிய நெடுஞ்சாலை அருகே எருதுவிடும் விழாவுக்கு அனுமதியில்லை. இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தன், ஓசூர் உதவி கலெக்டர் சரண்யா, கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் சதீஸ்குமார், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர்கள் ராஜேந்திரன், இளங்கோவன், மற்றும் பொதுப்பணித்துறை, வருவாய்துறை, தீயணைப்புத்துறை உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் எருது விடும் விழா ஏற்பாட்டாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.






