search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உச்சத்தை தொட்ட பூக்கள் விலை
    X

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உச்சத்தை தொட்ட பூக்கள் விலை

    • புத்தாண்டு பிறப்பு, வைகுண்ட ஏகாதசி போன்ற விழாக்களுக்காக பூக்களின் விலை உயர்ந்திருப்பது மகிழ்ச்சியை தருகிறது.
    • மல்லி, முல்லை விலையை ஒப்பிடுகையில் ரோஜா பூக்களின் வலை குறைவாக உள்ளது.

    கிருஷ்ணகிரி,

    வடகிழக்கு பருவ மழை மற்றும் பனி காரணமாக பூக்கள் வரத்து குறைந்து கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பூ மார்க்கெட்டில் மல்லிகை பூ கிலோ ரூ.1,500-க்கு விற்பனையாகிறது.

    கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக பூக்கள் விளைச்சல் குறைந்துள்ளன. இதனால் மார்க்கெட்டிற்கு வழக்கமாக வரும் சுமார் 2 டன் பூக்களுக்கு பதிலாக தற்போது சுமார் 20 ஆயிரம் கிலோ பூக்கள் மட்டுமே வருகின்றன.

    விழாக் காலங்களில் பூக்களின் விலை கடுமையாக உயர்வது வழக்கம். தற்போது மார்கழி மாதம் என்பதாலும், புத்தாண்டு, சபரிமலை சீசன் போன்ற விசேஷ நாட்கள் இருப்பதாலும் பூக்களின் தேவை அதிகமாக உள்ளது. பொங்கல் பண்டிகை வரை இந்த விலை உயர்வு நீடிக்க வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

    பூக்களின் விலை உயர்வு குறித்து இல்லத்தரசிகளும், பூ வியாபாரிகளும் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள். அதன் விபரம் வருமாறு:-

    ஓசூர் பூ வியாபாரிகள் சங்க செயலாளர் மூர்த்தி ரெட்டி கூறுகையில், கடந்த சிவ மாதங்களில் கன மழை காரணமாக மற்றும் கடும் பனிப்பொழிவு காரணமாக, பூக்கள் தோட்டத்திலேயே கருகியும், உதிர்ந்தும் விவசாயிகளுக்கு அதிக இழப்பு ஏற்பட்டது. பூ வியாபாரிகளும் பாதிப்படைந்தனர்.

    தற்போது கடந்த ஓரிரு நாட்களாக பூக்கள் விலை சற்று உயர்ந்துள்ளது. புத்தாண்டு பிறப்பு, வைகுண்ட ஏகாதசி போன்ற விழாக்களுக்காக பூக்களின் விலை உயர்ந்திருப்பது மகிழ்ச்சியை தருகிறது. விவசாயிகள் மற்றும் பூ வியாபாரிகளுக்கும் லாபம் கிடைத்து வருகிறது என்று கூறினார்.

    வேப்பனப்பள்ளி அருகே உள்ள உண்டிகைநத்தம் கிராமத்தைச் சேர்ந்த இல்லத்தரசி பிரேமா என்பவர் கூறுகையில் ,பெண்கள் விரும்பிய பூக்களை வாங்கி சூடுவதிலும், கோவிலுக்கு வாங்கித் தருவதிலும் எந்த தவறும் இல்லை. ஆனால் விலைக்கு ஏற்றவாறும், சீசனுக்கு ஏற்ற பூக்களை வாங்கி பயன்படுத்துவதன் மூலம் பணத்தை சிக்கனப்படுத்த முடியும் என்பதுடன், அதிகளவு பூக்களை சூடவும் முடியும்,

    கோவிலுக்கு வாங்கித் தரவும் முடியும். அந்தவகையில் தற்போது சாமந்தி பூ மற்றும் ரோஜாப்பூ சீசனாக இருப்பதால் அவற்றை வாங்கி பயன்படுத்தும் மனநிலைக்கு மாறிக் கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

    தேன்கனிக்கோட்டை யைச் சேர்ந்த பிளஸ்-1 மாணவி சாதனா கூறியதாவது:-தற்போது பனிக்காலம் என்பதால் ஜாதி மல்லி, முல்லை பூக்கள் சீசன் இல்லை. இந்த வகை பூக்கள் முழம் ரூ.50 வரையில் விற்பனை செய்யப்படுகின்றன.

    இதை அனைவராலும் வாங்க முடியாது. தேன்கனிக்கோட்டை சுற்று வட்டார பகுதிகளில் ரோஜாக்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன.

    மல்லி, முல்லை விலையை ஒப்பிடுகையில் ரோஜா பூக்களின் வலை குறைவாக உள்ளது. எனவே பலரும் அதை வாங்கி செல்கிறார்கள் என்று கூறினார்.

    Next Story
    ×