search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓசூரில் பகுதியில் வெள்ள நீர் வடிந்தது  -சீரமைப்பு பணிகள் தீவிரம்
    X

    ஓசூர் கே.சி.சி.நகர் பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய ஒரு கார் தலைகுப்புற கிடக்கும் காட்சி. 

    ஓசூரில் பகுதியில் வெள்ள நீர் வடிந்தது -சீரமைப்பு பணிகள் தீவிரம்

    • தண்ணீர் வீடுகளுக்குள் புகுந்து அனைத்து பொருட்களும் சேதமானது.
    • உணவு, மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட கே.சி.சி.நகரில் பலத்த மழையின் காரணமாக குடியிருப்பு பகுதிகளில் நேற்று மழைநீர் புகுந்துள்ளது. இதனால் மக்கள் வெளியே வரமுடியாமல் தவித்தனர். தெருக்களில் புகுந்த தண்ணீர் வீடுகளுக்குள் புகுந்து அனைத்து பொருட்களும் சேதமானது.

    மழைநீர் புகுந்ததால் மக்கள் மொட்டை மாடியில் தஞ்சம் அடைந்தனர். இதனால் மீட்பு குழுவினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து பாதுகாப்பாக ரப்பர் படகு மூலம் பொதுமக்களை மீட்டனர். உடைந்த ராஜகால்வாய்க்கு வரும் நீரின் அளவு குறைந்தது. இதனால் மெல்ல மெல்ல வெள்ளம் குறைந்து வருகிறது. கால்வாயை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனால் கே.சி.சி. நகரில் தண்ணீர் வடிந்தது.

    குடியுருப்புக்குள் வெள்ளம் புகுந்ததால் சாலைகள் அனைத்தும் சேதமடைந்துள்ளது. அதனை சீரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

    வெள்ளத்தில் மூழ்கிய கார்கள், இருசக்கர வாகனங்கள் சேதமடைந்துள்ளது.வெள்ளம் வடிந்ததால் கே.சி.சி. நகர் பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

    மீட்பு பணிகளை கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி நேற்று ஓசூர் எம்.எல்.ஏ. ஒய் பிரகாஷ், மேயர் சத்யா ஆகியோருடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் கலெக்டர் கூறியதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால், ஓசூர் தர்கா ஏரியிலிருந்து உபரிநீர் வரும்போது, கால்வாய் உடைப்பு ஏற்பட்டு கே.சி.சி.நகரில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது. அப்பகுதியில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்று அவர்களுக்கு தேவையான உணவு, மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் மழை அதிகமாகும் பட்சத்தில், பொதுமக்களை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்ல 2 திருமண மண்டபங்களில் நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

    மேலும் வருவாய்த்துறை, மாநகராட்சித் துறை, பொதுப்பணித்துறை தீயணைப்பு துறை, காவல் துறை மூலம் ஒருங்கிணைப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு கால்வாய் உடைப்புகளை சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    மேலும் மழை வெள்ளம் ஏற்பட்டுள்ள பகுதிகளில், மீட்பு பணிகள், முன்னெச்சரிக்கை பணிகள் நடைபெற்று வருகிறது. மழை தீவிரம் அடைந்தால் அசம்பாவிதம் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இவ்வாறு கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்தார்.

    இந்த ஆய்வின்போது, ஓசூர் உதவி கலெக்டர் சரண்யா, மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியன், துணை மேயர் ஆனந்தய்யா, தாசில்தார் கவாஸ்கர் மற்றும் அலுவலர்கள், மாநகராட்சி கவுன்சிலர்கள் உடன் இருந்தனர்.

    Next Story
    ×