search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மகாராஷ்டிரா கிரேன் விழுந்த விபத்தில் பலியானகிருஷ்ணகிரி என்ஜினியரின் குடும்பத்திற்கு நிதியுதவி
    X

    மகாராஷ்டிரா கிரேன் விழுந்த விபத்தில் பலியானகிருஷ்ணகிரி என்ஜினியரின் குடும்பத்திற்கு நிதியுதவி

    • கடந்த மாதம் 31-ந் தேதி நள்ளிரவில் பாலம் கட்டுமான பணியின் போது ராட்சத கிரேன் கவிழ்ந்ததில் தமிழகத்தை சேர்ந்த 2 பேர் உள்பட 20 தொழிலாளர்கள் பரிதாபமாக பலியாயினர்.
    • நேற்று மாவட்ட கலெக்டர் சரயு, பர்கூர் சட்டமன்ற மதியழகன் ஆகியோர், விபத்தில் பலியான சந்தோஷ் வீட்டிற்கு சென்று, அவரது மனைவி ரூபியை சந்தித்து, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியாக ரூ.3 லட்சத்திற்கான காசோலையை வழங்கினர்.

    கிருஷ்ணகிரி,

    மகாராஷ்டிரா மாநிலம் மும்பை - நாக்பூர் இடையே 701 கி.மீ தூரத்திற்கு சம்ருதி மகா மார்க் எக்ஸ்பிரஸ் சாலை 3 கட்டங்களாக அமைக்கப்பட்டு வருகிறது.

    மூன்றாம் கட்டமாக தற்போது பர்வீர் கிராமத்தில் இருந்து தானேயில் உள்ள வால்பே வரை 100 கி.மீட்டர் தூரத்திற்கு சாலைப்பணிகள் நடந்து வருகிறது. இதில் 9 இன்ஜினியர்கள் உள்பட நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்த பணியின் ஒரு பகுதியாக சகாபூர் தாலுகாவில் உள்ள குதாடி சர்லாம்பே கிராமத்தில் பாலம் கட்டப்பட்டு வந்தது. கடந்த மாதம் 31-ந் தேதி நள்ளிரவில் பாலம் கட்டுமான பணியின் போது ராட்சத கிரேன் கவிழ்ந்ததில் தமிழகத்தை சேர்ந்த 2 பேர் உள்பட 20 தொழிலாளர்கள் பரிதாபமாக பலியாயினர்.

    அவ்வாறு பலியானவர்களில், கிருஷ்ணகிரி அடுத்த போகனப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட

    வி.ஐ.பி நகரில் வசிக்கும் இளங்கோவன் மகன் இன்ஜினியர் சந்தோஷ்(வயது 36) ஒருவராவார். இவரது உடல் கடந்த 2ம் தேதி விடியற்காலை விமானம் மூலம் பெங்களூர் கொண்டுவரப்பட்டு, அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரி கொண்டுவரபட்டு, இறுதிச்சடங்கு செய்யப்பட்டு, கிருஷ்ணகிரி பழையபேட்டை இடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது.

    இந்நிலையில், அவரது குடும்பத்திற்கு முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.3 லட்சம் வழங்கப்படும் என தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

    இதையடுத்து நேற்று மாவட்ட கலெக்டர் சரயு, பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் ஆகியோர், விபத்தில் பலியான சந்தோஷ் வீட்டிற்கு சென்று, அவரது மனைவி ரூபியை சந்தித்து, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியாக ரூ.3 லட்சத்திற்கான காசோலையை வழங்கினர்.

    அப்போது கலெக்டர், சந்தோசின் மனைவியிடம், குழந்தைகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும். உங்கள் குடும்பத்திற்கு தேவையான உதவிகளை தமிழக அரசு செய்து தரும் என ரூபிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார்.

    இந்நிகழ்ச்சியின் போது கிருஷ்ணகிரி தாசில்தார் சம்பத் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உடனிருந்தனர்.

    Next Story
    ×