என் மலர்
உள்ளூர் செய்திகள்

முத்தாகவுண்டனூரில் வரலாற்று குழுவினர் கள ஆய்வு
- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை சாஸ்தா என்னும் அய்யனார் சிலை கிடைத்ததில்லை.
- ஒரு முழுமையான சிவன் கோவில் இருந்திருக்க வேண்டும்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தாலுகா குன்னத்தூர் ஊராட்சி பாம்பாறு ஆற்றின் கரை அருகே உள்ள முத்தாகவுண்டனூர் கிராமத்தில், மாவட்ட அரசு அருங்காட்சியகமும், வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவும் கள ஆய்வினை மேற்கொண்டனர்.
அங்குள்ள இடிந்து போன சிவன் கோவிலில் இருந்த சிலைகளை எடுத்து புதிதாக கோவிலைக் கட்டி அதன் அருகே வைத்திருக்கின்றனர்.
இந்த சிலைகள் பற்றி அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியதாவது:-
இந்த இடத்தில் எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த கங்கர்கள் காலத்திய வட்டெழுத்து நடுகற்கள் இரண்டு காணப்படுவதை வைத்தும், இந்த சிலைகளின் அமைப்பை ஆராய்ந்த போதும், இவை 1000 ஆண்டுகள் பழமையான சிலைகள் என்று தெரிய வருகிறது.
மஹிஷாசுர மர்த்தினி சிலையின் பின்கைகளில் சங்கு மற்றும் சக்கரத்தை பிடித்தவாறும், முன் கைகளில் சூலம் கொண்டு, எருமை உடல் கொண்ட அரக்கனை வதம் செய்யக்கூடிய காட்சி சிறப்பாக வடிக்கப்பட்டுள்ளது.
அடுத்துள்ள விஷ்ணு துர்க்கை சிலையின் பின் கைகளில் சங்கு சக்கரம், முன் வலது கையை அபய முத்திரையாகவும், இடது கையை தொங்கவிட்டும், நேராக நிற்கும் நிலையில் உள்ளது.
அடுத்தது பிரம்மசாஸ்தா உத்குடிகாசனத்தில் அமர்ந்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை சாஸ்தா என்னும் அய்யனார் சிலை கிடைத்ததில்லை. இதுவே முதன் முறை. இந்த இடத்தில் ஒரு முழுமையான சிவன் கோவில் இருந்திருக்க வேண்டும்.
அந்த கோவிலின் சிலைகள் தான் இது. அதேபோல், வட்ட வடிவ ஆவுடையார், சதுர ஆவுடையார், உடைந்த நந்தி ஆகியனவும் காணப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வுப்பணியில் தலைவர் நாராயணமூர்த்தி, சதாநந்தகிருஷ்ணகுமார், ஒருங்கிணைப்பார் தமிழ்செல்வன், பிரகாஷ், விஜகுமார், உள்ளூரைச் சேர்ந்த ராஜேஸ், பெருமாள் ஆகியோர் உடன் இருந்தனர்.






