search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவசாயிகளை அலைக்கழிக்க கூடாது :தருமபுரி கலெக்டர் உத்தரவு
    X

    குறை தீர் கூட்டத்தில் விவசாயி ஒருவர் பேசிய காட்சி.

    விவசாயிகளை அலைக்கழிக்க கூடாது :தருமபுரி கலெக்டர் உத்தரவு

    • விவசாயிகள் எழுப்பிய கேள்விகளுக்கு தொடர்புடைய துறை சார்ந்த அலுவலர்கள் பதில் அளித்தனர்.
    • தேவையில்லாத சான்றுகளைக் கேட்டு அவர்களை அலைக்கழிக்க கூடாது என்றார்.

    தருமபுரி,

    தருமபுரி கலெக்டர் சாந்தி தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் விவசாயிகள் எழுப்பிய கேள்விகளுக்கு தொடர்புடைய துறை சார்ந்த அலுவலர்கள் பதில் அளித்தனர்.

    தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் பேராசிரியர் சின்னசாமி பேசும்போது கடந்த நான்கு நாட்களாக பாலக்கோடு வட்டத்துக்கு உட்பட்ட சோமனஅள்ளி கிராமத்தில் யானை முகாமிட்டு நெல், கரும்பு, காய்கறிகள் மற்றும் விலை நிலங்களில் விவசாய பயன்பாட்டுக்காக நிறுவப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகளை சேதப்படுத்தி வருவதாகவும் உடனடியாக யானையை காட்டுக்குள் விரட்ட வேண்டும் என்றும், யானைகளால் சேதமான பகுதிகளுக்கு விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

    கலெக்டர் சாந்தி வனத்துறை அலுவலரை அழைத்து உடனடியாக யானைகளை பிடித்து வனப்பகுதியில் விட அறிவுறுத்தினார். இதுகுறித்து பேசிய வனத்துறை அதிகாரிகள் யானைகளை விரட்டும் பணியில் 15-க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் ஈடுபட்டு வருவதாகவும் மயக்க ஊசி செலுத்தி இரண்டு யானைகளை பிடித்து காட்டுப் பகுதியில் விட சென்னையில் அனுமதி பெற்றுள்ளதாகவும், அடுத்த வாரத்திற்குள் யானைகளைப் பிடித்து வனத்துக்குள் விடுவதற்கான பணிகள் நடைபெறும் என்றும் தெரிவித்தார்.

    இதன் மூலம் கடந்த ஒரு மாதமாக பென்னாகரம் மற்றும் பாலக்கோடுகளில் அட்டகாசம் செய்யும் காட்டு யானைகளின் அட்டகாசம் நிறைவுக்கு வரவுள்ளது. சோலை கோட்டை பகுதியை சேர்ந்த விவசாயி தனது மின் இணைப்பு வேறு ஒருவர் நபரின் பெயரில் உள்ளதாகவும், கடந்த இரண்டு வருடங்களாக அலைக்கழிக்கப்பட்டு வருவதாகவும் வலியுறுத்தினார்.

    கலெக்டர் சாந்தி பேசும் போது விவசாயிகளை அலைக்கழிக்காமல் உரிய ஆவணங்களை சரி பார்த்து மின் இணைப்பு பெயர் மாற்றி வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்ட காலத்திற்குள் ஆய்வு செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவையில்லாத சான்றுகளைக் கேட்டு அவர்களை அலைக்கழிக்க கூடாது என்றார்.

    தருமபுரி மாவட்டத்தில் முதல்முறையாக விவசாயிகளிடமிருந்து கேழ்வரகு கொள்முதல் செய்வதற்கு விவசாயிகள் தமிழக அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் நன்றி தெரிவித்தனர்.

    Next Story
    ×