என் மலர்
உள்ளூர் செய்திகள்

பிரதம மந்திரி கவுரவ நிதியை பெற விவசாயிகள் பதிவை புதுப்பிக்க வேண்டும்
- செல்போன் நம்பர் உடன் அருகில் உள்ள இ -சேவை மையத்திற்கு நேரில் சென்று புதுப்பித்துக் கொள்ளலாம்.
- இது தொடர்பான விவரங்களை உதவி வேளாண்மை அலுவலர்களை கேட்டு அறிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
காரிமங்கலம்,
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டாரத்தில் பிரதம மந்திரியின் கவுரவ நிதி புதுப்பிக்க மேலாண்மை துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து காரிமங்கலம் வேளாண்மை உதவி இயக்குனர் புவனேஸ்வரி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-
காரிமங்கலம் வட்டாரத்தில் பிரதம மந்திரியின் கவுரவ நிதி பி.எம் கிசான் திட்டம் மூலம் ஆண்டிற்கு 6000 பெறும் விவசாயிகள் அனைவரும் தங்கள் பதிவை பி.எம் கிசான் இணையதளத்தில் இ-கே.ஒய்.சி மூலம் புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.
பதிவை புதுப்பிக்க தவறிய விவசாயிகள் தங்கள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள செல்போன் நம்பர் உடன் அருகில் உள்ள இ -சேவை மையத்திற்கு நேரில் சென்று புதுப்பித்துக் கொள்ளலாம்.
அவ்வாறு புதுப்பிக்க தவறினால் இனி வரும் காலங்களில் பிரதம மந்திரியின் கவுரவ நிதியினை பெற இயலாது. மேலும் விவசாயிகள்
பி. எம் கிசான் திட்டத்தில் தொடர்ந்து நிதி உதவி பெற தங்களது நில உடமையை உறுதி செய்து கொள்வது அவசியம்.
ஆகையால் விவசாயிகள் தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலகத்தை நேரில் அணுகி தங்கள் பெயரில் உள்ள சிட்டா, ஆதார், ரேஷன் கார்டு நகல்கள் மற்றும் ஓ.டி .பி. பதிவு பெறப்பட்ட செல்போன் எண் ஆகியவற்றை எடுத்து வந்து சரி பார்த்து பதிவு செய்து கொள்ள வேண்டும்.
இது தொடர்பான விவரங்களை உதவி வேளாண்மை அலுவலர்களை கேட்டு அறிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
காரிமங்கலம் கெரகோட அள்ளி, கும்பார அள்ளி, நாகனம்பட்டி ஆகிய பகுதிகளுக்கு மலர்விழி என்பவரையும், அனுமந்தபுரம், முக்குளம், அண்ணாமலை அள்ளி, நரியன அள்ளி, கொண்டசாமன அள்ளி ஆகிய பகுதிகளுக்கு சிவஞானம் என்பவரையும், அடிலம் கொட்டுமாரன அள்ளி, புலிக்கல் ஆகிய பகுதிகளுக்கு சிவராமன் என்பவரையும், பைசு அள்ளி, காளப்பன அள்ளி, பூமாண்ட அள்ளி ஆகிய பகுதிகளுக்கு அமராவதி என்பவரையும் ஜக்க சமுத்திரம் கருக்கன அள்ளி, ஜிட்டாண்டஅள்ளி ஆகிய பகுதிகளுக்கு கிருஷ்ணன் என்பவரையும் விவசாயிகள் அணுகி விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.






